சென்னை: ஆட்சியில் பங்கு என அறிவித்த பிறகும் விஜய் தலைமையிலான தவெக உடன் தற்போது வரை ஒரு கட்சி கூட கூட்டணி அமைக்கவில்லை என்பது அக்கட்சி நிர்வாகிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக அதிமுக, பாஜகவிலிருந்து வந்த சிலர் மீண்டும் தங்களது தாய் கட்சிக்கே திரும்பலாமா என்ற எண்ணத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக தவெக கூட்டணியில் இணைவார் எனக் கூறப்பட்ட அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைய முடிவு செய்துள்ளதாக வரும் தகவல்கள் தவெகவில் இணைந்த நிர்வாகிகளை அசைத்துப் பார்த்திருக்கிறதாம்.

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு தயாராகி வரும் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என அரசியல் களம் இப்போதே அனல் பறக்கத் துவங்கிவிட்டது.
அண்மை காலமாகவே திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற காங்கிரஸ் நிர்வாகிகளின் கோரிக்கை திமுக கூட்டணியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை வெளிப்படையாகவே முன்வைத்தார். ஜோதிமணி எம்.பி, பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோரும் இதே கோரிக்கையை முன்வைத்து வந்தனர்.
முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை சட்டசபை தேர்தல் சமயத்தில் ஆட்சி அதிகாரம் என்ற வார்த்தை அதிகமாக ஒலித்து வருகிறது. இதற்கு காரணம் தவெக தலைவர் விஜய்யின் பேச்சு என்றே சொல்லலாம். சில கட்சிகள் இதுகுறித்து முன்பு பேசி இருந்தாலும், தேர்தல் கூட்டணி சமயத்தில் அவர்கள் டிமாண்ட் வைத்ததில்லை. மேலும் தேர்தல் நெருக்கத்தில் இந்த அளவுக்கு பேசுபொருளாகவும் மாறியதில்லை.
தங்களுடன் கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவோம் என்று விஜய் வெளிப்படையாக பேசியதில் இருந்து பல கட்சிகளில் முக்கிய விவாதப் பொருளாகவே இது மாறியுள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற குரல் வலுத்திருப்பது திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அக்கட்சி தவெக கூட்டணியில் இணையக்கூடும் என்ற பேச்சுகளும் கிளம்பின.
காரணம் தவெகவின் ஆட்சியில் பங்கு அளிப்போம் என்ற வாக்குறுதியை காங்கிரஸ் கட்சி மிகத் தீவிரமாக முன்னெடுத்தது தான். காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் விஜயின் தவெக பக்கம் செல்ல ஆவலாக இருக்கின்றனர். குறிப்பாக, ஜனநாயகன் பட சர்ச்சையில் ராகுல் காந்தி விஜய்க்கு அளித்த ஆதரவு, தவெக கூட்டணியை விரும்பும் காங்கிரஸ் நிர்வாகிகளிடையே குஷியை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அண்மையில் தமிழக காங்கிரஸ் தலைவர்களை அழைத்து டெல்லியில் ஆலோசனை நடத்தினார். தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தேர்தல் கூட்டணி மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். தமிழக காங்கிரஸ் சார்பில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றிருந்தனர். இந்தக் கூட்டத்தில் தவெக கூட்டணிக்கு ராகுல் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே தவெகவில் அதிருப்தி முணுமுணுப்புகள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆட்சியில் பங்கு என அறிவித்த பிறகும் விஜய் தலைமையிலான தவெக உடன் தற்போது வரை ஒரு கட்சி கூட கூட்டணி அமைக்கவில்லை என்பது அக்கட்சி நிர்வாகிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, விசிக தலைவர் திருமாவளவன் தவெக கூட்டணியில் இணைய வேண்டும் என விஜய் விரும்பினார். ஆனால், விஜய்யை கடுமையாக விமர்சித்து வரும் திருமாவளவன் திமுக உடன் தான் கூட்டணி என உறுதியாக அறிவித்து விட்டார். காங்கிரஸ் கட்சி மட்டுமே சாதகமான கட்சியாக இருந்து வந்தது. எனினும், அங்கிருந்தும் தற்போது பாசிட்டிவ் சிக்னல் இல்லை எனக் கூறப்படுகிறது.
பாமக தலைவர் அன்புமணியும் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணியில் இணைந்தார். தவெக கூட்டணியில் இணைவார் எனக் கூறப்பட்ட அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைய முடிவு செய்துள்ளதாக தகவல் வருகிறது. இது தவெக நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறதாம்.
ஆட்சியில் பங்கு என்ற டிரம்ப் கார்டை பயன்படுத்தியும் கூட, கூட்டணிக்கு வருவதற்கு கட்சிகள் தயாராக இல்லை என்பது விஜய் வெற்றி பெறுவார் என அவர்கள் நம்பவில்லை என்பதையே காட்டுவதாக தவெக நிர்வாகிகள் இடையே முணுமுணுப்பு எழுந்துள்ளதம். அதிமுக, பாஜகவிலிருந்து வந்த சிலர் மீண்டும் தங்களது தாய் கட்சிக்கே திரும்பலாமா என்ற எண்ணத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Credit: Oneindia