சென்னை: நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தை இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு தயார் படுத்தி வருகிறார். அவரது ஜன நாயகன் படத்தின் சென்சார் விவகாரத்தையும் இவர்கள் தரப்பில் இருந்தே முடித்துக் கொள்ள முடிவு எடுக்கப்பட்டதாக பேச்சுக்கள் அடிபடுகிறது. இந்நிலையில் விஜயின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகர் விஜய் கட்சி தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் முடியப்போகிறது. அடுத்த வாரத்தில் தனது கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாட உள்ளார். கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகள் முழுமையாக முடிந்துவிட்டது. ஆனால் ஒரு முறை கூட பத்திரிகையாளர்களை விஜய் சந்திக்கவில்லை என்பது பெரும்பாலானோர் தரப்பில் முன் வைக்கப்படும் கேள்வியாக உள்ளது. ஒரு முறை மதுரை விமான நிலையத்தில் நடிகர் விஜய் ஜன நாயகன் படப்பிடிப்புக்காக வந்தபோது பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது தான் ஜன நாயகன் படப்பிடிப்புக்காக வந்திருப்பதாகவும், அரசியல் கேள்விகள் வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

விஜய்க்கு பயமே இல்லை: இப்படி இருக்கையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.எ. சந்திரசேகர், பத்திரிகையாளர்களைச் சந்திக்கையில் விஜய் ஏன் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுக்கிறார் என்ற கேள்வியை முன் வைத்தனர். அதற்கு, " உங்களால் நீங்கள் நினைத்ததை பேச முடிகிறதா? இல்லை அல்லவா? அப்படியானால் இத்தனை பேரை எதிர்த்து கட்சி நடத்தும் விஜய்க்கு எப்படி இருக்கும். அவருக்கு பயம் எல்லாம் எல்லை. விஜய் எனது மகன், எனது ரத்தம். விஜய்க்கு பயம் எல்லாம் இல்லை. எனது படங்களை போய்ப் பாருங்கள் எனக்கு பயமில்லை என்பதை புரிந்து கொள்வீர்கள். விஜய் இப்போதைக்கு அமைதியாக இருக்கிறார் அவ்வளவுதான்" என்று தெரிவித்தார்.
ஜன நாயகன்: எஸ்.ஏ. சந்திரசேகர் இவ்வாறு பேசி உள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இவரது பேச்சைக் கேட்ட பலரும், விஜய் சினிமாவில் தான் பத்திரிகையாளர்கள் முன் பேசுவார் போல, நிஜத்தில் பத்திரிகையாளர்கள் பக்கமே வரமாட்டேன் என்கிறாரே என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். தேர்தல் நெருங்கும் நேரத்திலாவது நடிகர் விஜய் பத்திரிகையாளர்களைச் சந்திப்பாரா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. சென்சாருக்கு வேண்டி நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படம் தொடுத்திருந்த வழக்கை அவர்களாகவே வாபஸ் பெற முடிவு செய்துவிட்டதாகவும், சென்சார் தரப்பில் என்ன மாதிரியான வழிமுறைகளை கூறுகிறார்களோ அதனையே பின்பற்றுவதாகவும் பேச்சுக்கள் அடிபடுகிறது.

Credit: Filmibeat