சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உள்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தலைமை என்று சொல்லப்பட்டாலும், பாஜகவின் கையே ஓங்கியிருந்ததை மேடையிலேயே காண முடிந்தது. பிரதமர் மோடி தனது உரையில் அதிமுக என்ற பெயரை கூட உச்சரிக்காததும், எடப்பாடி பழனிசாமி பெயரை முதல்வர் வேட்பாளராக முன்மொழியாததும் ர.ரக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. திமுகவில் கூட்டணி வலுவாக உள்ள நிலையில், பாஜகவுடன் கோர்த்துள்ள அதிமுக வலுவான கூட்டணி அமைக்கப்படும் என்று தொடக்கத்தில் இருந்தே கூறி வந்தது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதிமுக - பாஜக கூட்டணி சேர்ந்தது. இதையடுத்து இந்த கூட்டணியில் மற்ற கட்சிகளை சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் கூட்டணியை ஒருங்கிணைக்க மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் 3 பேர் குழுவை பாஜக அமைத்தது. இந்த குழுவினர் பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
45 நிமிட பேச்சில் அதிமுக பெயரையே உச்சரிக்காத பிரதமர் மோடி.. எடப்பாடி வேற ரூட்.. கூட்டணியில் முரண்?
அதன் பலனாக அந்த கட்சிகள் அனைத்தும் பாஜக - அதிமுக உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றன. இதையடுத்து தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலத்தை காட்ட, கூட்டணி தலைவர்களை ஒரே மேடையில் பங்கேற்க செய்வதற்கும், அதில் பிரதமர் மோடி பங்கேற்கும் வகையில் பிரமாண்ட பிரசார கூட்டத்திற்கு தமிழக பாஜக ஏற்பாடு செய்தது.
அதன்படி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்து கொள்ள கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் ஏராளமானோர் காலை முதலே அங்கு திரண்டனர். மேடையில் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, டி.டி.வி. தினகரன், ஜி.கே. வாசன் உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் இருந்தனர்.
மோடி பேச்சால் ஸ்டாலினுக்கு கலக்கம்.. அவசரமா அறிக்கை விட்டு மாட்டிக்கிட்டார்.. வானதி விமர்சனம்
பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமி படம் பெரிய அளவில் வைக்கப்பட்டு இருந்தது. கூட்டணி கட்சி தலைவர்களின் படங்கள் சிறிய அளவில் இருந்தன. ஆனால் இதனை தாண்டி மேடை முழுக்க பாஜக சாயலே இருந்தது. வழக்கமாக அதிமுக பங்கேற்கும் கூட்டங்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படம் வைக்கப்பட்டு இருக்கும். ஆனால், இந்த கூட்டத்தில் அதுவும் இல்லை.
அரசியல் தலைவர்கள் பேசுவதற்கு சரியாக பின்பக்கம் மேடையில் தாமரை சின்னம் இடம் பெற்று இருந்தது. கூட்டணியில் தனது ஆதிக்கத்தை காட்டும் வகையில் பாஜக திட்டமிட்டு செய்ததாகவே அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். அதுபோக, பிரதமர் மோடி தனது 45 நிமிட உரையில் ஒரு இடத்தில் கூட அதிமுக என்ற வார்த்தையை உச்சரிக்கவில்லை.
தமிழகத்தில் அதிமுகதான் கூட்டணிக்கு தலைமை என்று சொன்னாலும் பெரியண்ணன் போல பாஜக செயல்படுவதையே இது காட்டுவதாக குமுறும் ரத்தத்தின் ரத்தங்கள்.. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படம் இல்லாததை பார்த்தும் வேதனை அடைந்துள்ளனர். முதல் கூட்டமே இப்படி என்றால் இன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டியிருக்கோ என கூட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினரும் முனுமுனுத்துக்கொண்டே சென்றதையும் பார்க்க முடிந்தது.
என்னது ஒரு தாய் பிள்ளையா? அப்புறம் எதுக்குங்க தனித்தனி கட்சி? டிடிவி தினகரனை நோக்கி எழும் கேள்விகள்!
இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடியும் இரட்டை என்ஜின் ஆட்சி என்று பேசினார். மோடி பேசுகையில், "ஊழல், குற்றவாளி குழுக்கள், குற்றங்களை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்று தமிழக மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். தமிழகத்தில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியின் இரட்டை என்ஜின் அரசு அமைவது உறுதியாகிவிட்டது. தி.மு.க. ஆட்சிக்கு ஜனநாயகம், நம்பகத்தன்மை இல்லை.
தி.மு.க. அரசு ஒரு குடும்பத்துக்காக மட்டும் இயங்கிக்கொண்டிருக்கிறது. பெண்களை வசைபாடுவது, நமது கலாசாரத்தை வசைபாடுவது போன்ற காரணங்களாலேயே தி.மு.க.வில் இருப்பவர்கள் கட்சியில் முன்னேறுகிறார்கள். இதன் பாதிப்பினை தமிழகம் சுமக்க வேண்டியது இருக்கிறது. வளர்ச்சியடைந்த நாடு என்ற இலக்கை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கும் வேளையில் தமிழகத்தை தி.மு.க.விடம் இருந்து விடுவிக்க வேண்டும். அதற்கு இரட்டை என்ஜின் அரசு அமைவது அவசியம்" என்றார்.
Credit: Oneindia