மும்பை: நாட்டின் மிகவும் பணக்கார மாநகராட்சியாகக் கருதப்படும் மும்பை உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், அங்கு இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மும்பை மட்டுமின்றி, மகாராஷ்டிர முழுக்க புனே, தானே உட்பட மாநிலம் நடந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்த நிலையில், பாஜக மற்றும் உத்தவ் தாக்கரே தரப்புக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் தான் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்திருந்தது. அதில் பாஜக பெரியளவில் வெற்றி பெற்றிருந்தது. இதற்கிடையே அடுத்த கட்டமாக அங்குப் பல்வேறு இடங்களில் மாநகராட்சித் தேர்தல் நடைபெற்ற நிலையில், அங்கு முடிவுகள் இன்று அறிவிக்கப்படுகின்றன.

மும்பை, புனே, தானே, நவி மும்பை, கல்யாண்-டோம்பிவலி, பிம்ப்ரி-சின்ச்வாட், நாக்பூர், நாசிக், அவுரங்காபாத் (சத்ரபதி சம்பாஜிநகர்), சோலாப்பூர், கோலாப்பூர், அமராவதி உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகளின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் போட்டி கடுமையாக உள்ளது. மாநிலம் முழுவதும் கொள்கைகளைத் தாண்டி பல்வேறு கட்சிகளும் எதிர்பாராத பல கூட்டணிகளை உருவாக்கியுள்ளன. களத்தில் உள்ள அனைத்து ஆறு பிரதானக் கட்சிகளும் தங்கள் கூட்டணிகளை மாற்றி அமைத்துள்ளன, சில மாநகராட்சிகளில் தனித்தும் போட்டியிட்டுள்ளன.
இதில் நாட்டிலேயே பணக்கார மாநகராட்சியான மும்பை தேர்தல் முடிவுகள் மீதே கவனம் அதிகரித்துள்ளது. மும்பையில் பாஜக- ஷிண்டே சிவசேனா கூட்டணி இணைந்து போட்டியிடுகிறது. மறுபுறம் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே சகோதரர்கள் இணைந்து போட்டியிடுகிறார்கள். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இரு சகோதரர்களும் இணைந்துள்ளனர். மராத்தி முழக்கத்தை முன்வைத்து இவர்கள் தேர்தலை எதிர்கொள்கிறார்கள். காங்கிரஸ் தனித்துக் களமிறங்கியுள்ளது. ஆக்சிஸ் மை இந்தியா உட்படப் பல சர்வேக்கள், 227 இடங்களைக் கொண்ட மும்பை மாநகராட்சியில் பாஜக கூட்ணி வெல்லும் என்றே கூறியிருக்கிறது.
ஏக்நாத் ஷிண்டேவின் சொந்தத் தொகுதியான தானேவில், சிவசேனா தனது கோட்டையைத் தக்கவைத்துக் கொள்ள மிகவும் முயல்கிறது. 131 உறுப்பினர்களைக் கொண்ட இந்த தானே மாநகராட்சியிலும் போட்டி கடுமையாக இருக்கிறது. இங்கு பாஜக-சிவசேனா, தாக்கரே சிவசேனா- ராஜ் தாக்கரே- சரத் பவார் கட்சி போட்டியிடுகின்றன. இது தவிரக் காங்கிரஸ் மற்றும் என்சிபி தனித்துப் போட்டியிடுவதால் நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
அதேபோல மற்றொரு முக்கிய மாநகராட்சியாக புனே மற்றும் பிம்ப்ரி-சின்ச்வாட்டிலும் போட்டி கடுமையாக உள்ளது. இங்கே பவார் குடும்பத்தினர் மீண்டும் இணைந்துள்ளனர். அஜித் பவார் என்சிபி மற்றும் சரத் பவார் என்சிபி இந்த இரு மாநகராட்சிகளிலும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. இப்படி இந்த தேர்தலில் பல வினோதக் கூட்டணிகளை உருவாகி இருந்தது. இதனால் மகாராஷ்டிர நகராட்சித் தேர்தல் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஆசியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை மாநகராட்சி மற்றும் மகாராஷ்டிராவின் பிற 28 மாநகராட்சிகளில் வாக்கு எண்ணிக்கை இப்போது தொடங்கியுள்ளது. மும்பையில் பாஜக மற்றும் உத்தவ் தாக்கரே தரப்புக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருப்பினும் கூட்டணியாக பாஜக முன்னிலை பெற்றுள்ளது.
காலை 11 மணி நிலவரப்படி மும்பையில் பாஜக 19 இடங்கள், சிவசேனா 9 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தாக்கரே சிவசேனா 12 இடங்களிலும் ராஜ் தாக்கரே கட்சி 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதேபோல நவி மும்பையில் இப்போது முழுமையாக பாஜக கூட்டணியே ஆதிக்கம் செலுத்துகிறது.
புனேவில் சந்தேகமே இல்லாமல் பாஜக தான் முன்னிலையில் உள்ளது. அங்கு பாஜக 52 இடங்கள், சிவசேனா 4 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அஜித் பவார் என்சிபி 18 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தாக்கரே சிவசேனா 1 இடங்களிலும் ராஜ் தாக்கரே கட்சி 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
தானேவில் சரத் பவார் கட்சியின் ஆதிக்கம் இருக்கிறது. அங்கு 26 இடங்களில் சரத் பவார் கட்சி ஆதிக்கம் செலுத்துகிறது. பாஜக 6 இடங்கள், சிவசேனா 9 இடங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது.
Credit: Oneindia