பாமகவுடன் கூட்டணி இல்லை.. இது வன்னியர் சமூகத்திற்கு எதிரான முடிவு அல்ல.. திருமாவளவன் விளக்கம்!

By Yogeshwaran Moorthi

சென்னை: பாமக உடன் கூட்டணி இல்லை என்ற முடிவு வன்னியர் சமூகத்திற்கு எதிரான முடிவு அல்ல என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தனி நபர் மீதும், எந்தவொரு கட்சியின் மீதும் விசிகவுக்கு காழ்ப்புணர்ச்சி இல்லை என்று கூறியுள்ள திருமாவளவன், பாமகவின் செயல்பாடு காரணமாகவே அந்தக் கட்சியுடன் கூட்டணி இல்லை என்ற முடிவை எடுத்ததாக விளக்கம் அளித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதால், அவர்கள் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இதில் அன்புமணி தரப்பு பாமக, என்டிஏ கூட்டணியில் இணைந்துவிட்டது. இதனால் ராமதாஸ் தரப்பு பாமக திமுக பக்கம் நகர்ந்தது. ஆனால் விசிக தலைவர் திருமாவளவன் ஒப்புக் கொள்வாரா என்ற கேள்வி எழுந்தது.


Thirumavalavan

இதனிடையே பாமக தரப்பில் திருமாவளவனை சமாதானம் செய்யும் முயற்சிகளும் நடந்தன. இருந்தாலும் 14 ஆண்டுகளுக்கு முன் எடுத்த முடிவில் விசிக உறுதியாக இருப்பதாக திருமாவளவன் அறிவித்தார். பாஜக மற்றும் பாமக இருக்கும் அணிகளுடன் விசிக கூட்டணியில் இருக்காது என்று தெரிவித்தார். இதனால் ராமதாஸ் தரப்பு பாமக எந்தக் கூட்டணியில் இணையும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

திருமாவளவன் கடிதம்

இந்த நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் திருமாவளவன், திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளோடு கடந்த காலங்களில் நாம் முரண்பட்டு எதிர்நிலையில் நின்றிருக்கிறோம். ஆனால், தற்போதைய சூழலில் தேசம் தழுவிய அளவில் நிலவிவரும் தீங்கு நிறைந்த சனாதன அரசியலின் சதியை முறியடிக்க வேண்டிய தேவையை உணர்ந்து, திமுக தலைமையிலான 'மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில்' நாம் அங்கம் வகித்து செயலாற்றி வருகிறோம்.

கடந்து வந்த பாதை

ஏற்கனவே, 2001 மற்றும் 2011 சட்டசபைத் தேர்தல்களில் திமுக தலைமையிலான கூட்டணியில் நாம் இடம் பெற்றிருக்கிறோம். 2011 இல் அமைந்த திமுக கூட்டணியில் விசிகவும் பாமகவும் இடம் பெற்றிருந்தன. ஆனால், அத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டது. அதன்பின்னர், பாமக எடுத்த 'சோசியல் என்ஜினியரிங்' என்கிற 'சாதி அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தும் தேர்தல் உத்தியைக்' கையில் எடுத்தபோது தமிழக அரசியல் களம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியது.

திமுக கூட்டணி

அதன்பின்னர் தான் நாம், 'பாஜகவுடன் மட்டுமின்றி பாமகவோடும் இனி தேர்தல் உறவு இல்லை' என்கிற நிலைபாட்டை மேற்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். 2016 இல் இடதுசாரிகள் மற்றும் மதிமுக ஆகிய தோழமைகட்சிகளோடு இணைந்து மக்கள்நலக் கூட்டணி அமைத்து அப்போதைய சட்டசபைத் தேர்தலைச் சந்தித்தோம். வெற்றிவாய்ப்பை இழந்தோம். அதன்பின்னர் காவிரிநீர்ச் சிக்கலையொட்டி திமுக முன்னெடுத்த முயற்சியின் அடிப்படையில் ஒருங்கிணைந்து களமாடினோம். அதுவே மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியாகப் பரிணமித்தது.

சட்டசபைத் தேர்தல்

2017ல் இருந்து இக்கூட்டணி கருத்தியல் அடிப்படையில் களம் பல அமைத்து போராடி வருவதுடன், அடுத்தடுத்து சில தேர்தல்களையும் சந்தித்து சாதனைகளைப் படைத்து வருகிறது. குறிப்பாக, 2021-சட்டமன்றத் தேர்தல், 2024-நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் என இக்கூட்டணி தொடர்ச்சியாக மக்களின் நல்லாதரவோடு வெற்றிகளைப் பெற்று வருகிறது. தற்போது 2026-சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவுள்ளது.

கொள்கை கூட்டணி

மதச்சார்பின்மை, சமத்துவம், மாநில உரிமைகளை நிலைநாட்டும் பரந்துபட்ட நோக்கத்தில் - தெளிவான கொள்கை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது தான் திமுக தலைமையிலான கூட்டணி என்பதை நாடறியும். கடைசி நிமிட தொகுதிப் பங்கீட்டுக்காக தேர்தல் நேரத்தில் அமைக்கப்படும் கூட்டணி என்பதாக இல்லாமல், மதவெறி சக்திகளையும் அவர்களோடு கைகோர்த்துள்ள இன்னபிற கட்சிகளையும் வீழ்த்தும் வகையில் இந்தக் கூட்டணியை அமைத்து, அண்ணன் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார்.

விசிக முரண்பாடு

அந்த வகையில் நாம் அவருக்கு உற்றத் துணையாக இந்தக் களத்தில் கைகோர்த்து நிற்கிறோம். பாஜக தலைமையிலான 'தேசிய ஜனநாயக கூட்டணியில்' இடம்பெற்றுள்ள அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளோடு, நாம் இத்தகைய கொள்கை அடிப்படையில் தான் முரண்பாடு கொண்டுள்ளோம். அதனடிப்படையில் நமது கருத்துகளையும் வெளிப்படுத்தி வருகிறோம். மற்றபடி தனிப்பட்டமுறையில் தனிநபர் யார்மீதும் அல்லது எந்தவொரு கட்சியின்மீதும் நமக்கு காழ்ப்புணர்வு இல்லை.

வன்னியர் சமூகத்தினருக்கு எதிரான முடிவு அல்ல

குறிப்பாக, பாஜக மற்றும் பாமக ஆகிய கட்சிகளை அந்த வகையில்தான் மதிப்பீடு செய்து இந்த நிலைபாட்டை மேற்கொண்டுள்ளோம். ஆனால், வன்னியர் சமூகத்தைச் சார்ந்த வெகுமக்களுக்கு எதிராக நாம் முடிவெடுத்ததைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிட சிலர் முயற்சிக்கின்றனர். அதேபோல பாஜகவை விமர்சித்தால் ஒட்டுமொத்த இந்துச் சமூகத்துக்கும் நாம் எதிரானவர்கள் என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிட சனாதன சக்திகள் முயற்சிக்கின்றனர்.

திருமாவளவன் வேண்டுகோள்

ஒரு சாதியினருக்கோ அல்லது ஒரு மதத்தினருக்கோ எதிராக நமது கட்சி சிந்தித்ததுமில்லை; செயல்பட்டதுமில்லை. தமிழ்நாட்டை சூழும் சனாதன - ஃபாசிச சக்திகளை வீழ்த்துவதே நமது இலக்காகும். அதற்கான வெற்றி வியூகத்தை வகுத்து கூட்டணியை தலைமையேற்று வழிநடத்தி வரும் அண்ணன் ஸ்டாலினின் அளப்பறிய முயற்சிக்கு அனைத்து வகையிலும் ஒத்துழப்போம். திரிபுவாதங்களுக்கும் அவதூறுகளுக்கும் இடம் தரும் வகையில் விசிகவினர் கருத்துகள் அமைந்துவிடக் கூடாது என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.

Credit: Oneindia

English summary
Thirumavalavan: VCK leader Thirumavalavan has stated that the decision not to form an alliance with the PMK is not a decision against the Vanniyar community. Thirumavalavan said that the VCK harbors no animosity towards any individual or political party, and explained that the decision not to ally with the PMK was made solely due to the latter's actions.
Story first published: Sunday, February 8, 2026, 7:31 [IST]
Other articles published on Feb 8, 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+