சென்னை: தமிழ்நாட்டில் பொங்கல் விடுமுறை இன்றுடன் முடியும் நிலையில், பொதுமக்கள் மெல்லத் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்குக் கிளம்ப ஆரம்பித்துள்ளனர். இதற்கிடையே இன்றைய தினம் வானிலை எப்படி இருக்கும். பயணத்தை எப்படித் திட்டமிட வேண்டும் என்பது தொடர்பாக நாம் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் கடந்த வியாழக்கிழமை முதல் பொங்கல் விடுமுறை இருந்தது. பொங்கல் மற்றும் வீக் எண்ட் என அடுத்தடுத்து லீவ் வந்ததால் மொத்தம் 4 நாட்கள் விடுமுறையாகவே போனது. இதன் காரணமாகப் பொதுமக்கள் பலரும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடத் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றிருந்தனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை பண்டிகை விடுமுறை எல்லாம் முடிந்துள்ள நிலையில், சொந்த ஊர்களில் இருந்து சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்குத் திரும்பி வருகிறார்கள். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே மழை சீராகக் குறைந்து வருகிறது. பருவமழை முடியும் நிலையில், வெப்பம் மட்டுமே லேசாக குறைந்து வருகிறது. இதற்கிடையே ஊர் திரும்புவோம் கவனிக்க வேண்டிய வானிலை என்ன.. பயணத்தை எப்படித் திட்டமிடலாம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
முன்னதாக இது குறித்து வானிலை மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், "வடகிழக்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்தியப் பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று முதல் வரும் 21ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். ஜனவரி 22ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஜனவரி 23ம் தேதி கடலோரத் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
24 மணி நேரக் குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரை வரும் 21ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. இயல்பு நிலையிலிருந்து குறைந்தபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டைப் பொறுத்தவரை அதுவும் 21ம் தேதி வரை 21-01-2026 வரை: தமிழகம், புதுவை வரை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.
உறைபனி எச்சரிக்கை இன்று தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (18-01-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அதாவது மழை இன்றைய தினம் பெரியளவில் இருக்காது. பனிமூட்டம் கூட நீலகிரி கொடைக்கானல் பகுதிகளில் மட்டுமே இருக்கும் என்பதால் பொதுமக்கள் கவலையின்றிச் சொந்த ஊரிலிருந்து திரும்பலாம்!
Credit: Oneindia