ஒரே கஞ்சா புகை.. அமெரிக்க ஓபன் ஆட்டத்தை பாதியில் நிறுத்திய உலகின் முன்னணி வீராங்கனை அரினா சபலென்கா
நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் போது திடீரென மைதானத்தில் கஞ்சா புகைக்கும் வாசனை அடித்ததால், முன்னணி வீராங்கனை அரினா சபலென்கா ஆட்டத்தை நிறுத்தி நடுவரிடம் முறையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் உலகின் முன்னணி வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, உஸ்பெகிஸ்தானின் கமிலா ரகிமோவாவை எதிர்கொண்டார்.
முதல் செட்டில் சபலென்கா 2-0 என முன்னிலையில் இருந்தபோது மைதானத்தில் கடுமையான கஞ்சா நெடி வீசியது. இதனால் சர்வீஸ் செய்ய முடியாமல் திணறிய சபலென்கா, உடனடியாக ஆட்டத்தை நிறுத்தி நடுவர் இவா அஸ்டெராகியிடம் சென்றார். மைதானத்திற்குள் யாரோ கஞ்சா புகைப்பதாகவும், அதன் நெடி மிகக் கடுமையாக வீசுவதாகவும் புகார் கூறினார். நியூயார்க்கில் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கஞ்சா பயன்பாடு சட்டப்பூர்வமானது என்றாலும், மைதான வளாகத்திற்குள் புகைபிடிக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பின்னர் ஆட்டம் தொடர்ந்தது. சபலென்கா எந்த வாய்ப்பும் தராமல் அபாரமாக ஆடி முதல் செட்டை வெறும் 35 நிமிடங்களில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் கமிலா ரகிமோவா கடும் சவால் தந்தார்.
ஆனால், சபலென்கா 10 ஏஸ், 29 வின்னர்களை பறக்கவிட்டு ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். 5-4 என்ற நிலையில் எதிரணியின் சர்வீசை முறியடித்தார். முடிவில் சபலென்கா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று கடைசி 16 பேர் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இந்த வெற்றிக்குப் பின் பேசிய சபலென்கா, தரவரிசையில் 92வது இடத்தில் உள்ள ரகிமோவா இரண்டாவது செட்டில் அபாரமாக ஆடி தனக்கு கடும் நெருக்கடி கொடுத்ததாக தெரிவித்தார். அடுத்த சுற்றில் சபலென்கா, ரஷ்யாவின் டயானா ஷ்னைடர் அல்லது அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்டை எதிர்கொள்கிறார். தரவரிசையில் தனது முதலிடத்தை தக்கவைக்க சபலென்கா இத்தொடரில் கோப்பை வென்றாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

