
ஜோகோவிச் சர்ச்சை
20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற ஜோகோவிச், ரோஜர் ஃபெடரர், நடால் ஆகியோரின் சாதனையை சமன் செய்தார்,கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவிய அவர், பின்னர் சிறிது காலம் ஓய்வில் இருந்தார். தற்போது இம்மாதம் நடைபெறும் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் ஜோகோவிச் இருந்தார். ஆனால் அவருக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தவில்லை
ஆஸ்திரேலிய ஓபனில் விளையாட வேண்டும் என்றால், அவர் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும். ஆனால், தமக்கு இருக்கும் உடல் நிலை பிரச்சினை காரணமாகவே தாம் தடுப்பூசியை செலுத்தி கொள்ளவில்லை என்று ஜோகோவிச் கூறினார். இதற்காக தாம் தடுப்பூசி போட தகுதியான நபர் அல்ல என்று மருத்துவர்கள் சான்றிதழ் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்

பொதுமக்கள் கண்டனம்
இதனை ஏற்று கொண்ட ஆஸ்திரேலிய டென்னிஸ் சம்மேளனம், ஜோகோவிச் விளையாட அனுமதி அளித்தது. இந்த முடிவு பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தடுப்பூசி செலுத்த தகுதியில்லாத நபர்கள் எத்தனையோ பேர் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாமல் விதிகள் காரணமாக முடங்கியுள்ளனர். ஆனால் ஜோகோவிச்சுக்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அரசாங்கத்தை கேள்வி எழுப்பினர்.

ஆஸி. பிரதமர் கண்டிப்பு
இந்த விவகாரம் குறித்து பேசிய பிரதமர் ஸ்காட் மாரிசன், தடுப்பூசி செலுத்த தகுதியில்லாத நபர் என்று ஜோகோவிச் நிரூபித்தால் மட்டுமே அவர் ஆஸ்திரேலியாவுக்கு வர அனுமதிக்கப்படுவார். இல்லையேனில் அடுத்த விமானத்திலேயே திருப்பி அனுப்பபடுவார் என்று தெரிவித்தார். இதே போன்று டென்னிஸ் ஜாம்பவான் ராட் லேவர், 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவருக்கு தடுப்பூசி செலுத்த தகுதியில்லாத நபர் என்று சொன்னால் ஏற்று கொள்ள முடியவில்லை என்று தெரிவித்தார்.

தவறான விசா
இதனிடையே ஜோகோவிச்சின் உதவியாளர்கள் தவறான விசாவை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விசா உடையவர்களுக்கு மருத்துவ காரணங்களால் தடுப்பூசி செலுத்தவில்லை என்று கூற முடியாது என்று தெரிவித்துள்ள விமான நிலைய அதிகாரிகள், ஜோகோவிச்சை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் நடப்பு சாம்பியனான ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











