மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் முதல் சுற்று டென்னிஸ் ஆட்டத்தின்போது பந்தை எடுப்பதஙறகாக நிறுத்தப்பட்ட சிறுமி ஒருவர் மயங்கி விழுந்ததால் போட்டி தடைபட்டது. 2026ஆம் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஞாயிற்றுக்கிழமை கடும் வெப்பநிலைக்கு மத்தியில் தொடங்கியது. ரஷ்யாவின் எகடேரினா அலெக்சாண்ட்ரோவா சர்வ் செய்துகொண்டிருந்தபோது, சிறுமி திடீரென்று மயங்கினார்.
நடுவர் இருக்கைக்குப் பின் நின்றிருந்த அந்தப் பெண் மயங்கியதும், துருக்கியின் ஜைனப் சான்மேஸ் மற்றும் அலெக்சாண்ட்ரோவா இருவரும் அவருக்கு உதவ ஓடினர். அலெக்சாண்ட்ரோவா ஐஸ் பைகளை எடுத்து வந்தார். உடனடியாக மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஆட்டம் சில நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டது.

ஆட்டம் மீண்டும் தொடங்கியதும், தகுதிச்சுற்று வீராங்கனையான சான்மேஸ், 11ஆம் நிலை வீராங்கனை அலெக்சாண்ட்ரோவாவை 7-5, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தனது வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தார். இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.சிறுமிக்கு ஓடி உதவிய சான்மேஸின் மனிதாபிமான செயலை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.
23 வயதான சான்மேஸ், கடந்த ஆண்டு விம்பிள்டனில் கிராண்ட் ஸ்லாம் மூன்றாவது சுற்றுக்கு வந்த முதல் துருக்கிய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். அவர் தனது அடுத்தப் போட்டியில் அமெரிக்காவின் வைல்ட் கார்டு வீராங்கனை எலிசபெத் மான்ட்லிக் அல்லது ஹங்கேரியின் அனா பாண்டரை எதிர்கொள்ள உள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் வரலாற்றில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை பலமுறை தாண்டியுள்ளது. இந்த வாரம் குறைந்தபட்சம் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இது வீரர்களுக்குக் கடும் சவாலை ஏற்படுத்தும்.