ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டி.. சீன வீராங்கனையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற அரினா சபலென்கா
சிட்னி : ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அரினா சபலென்கா வெற்றி பெற்று பட்டத்தை வென்றார். கடந்த ஆண்டும் அரினா சபலென்கா பட்டம் வென்ற நிலையில், தொடர்ந்து இரண்டாவது ஆண்டும் வென்று அசத்தினார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் அரை இறுதியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா மற்றும் சீனாவின் குயின்வென் ஜெங் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தனர். கடந்த ஆண்டு தன் முதல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்று சாம்பியன் ஆன அரினா சபலென்கா இந்த முறையும் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

மறுபுறம் கடந்த பத்து ஆண்டுகளில் ஒரு கிராண்ட்ஸ்லாம் தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் இரண்டாவது சீனர் என்ற பெருமையுடன் களமிறங்கினார் குயின்வென் ஜெங். சுமார் 16 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் அரினா சபலென்கா 6 - 3, 6 - 2 என்ற நேர் செட்களில் எளிதாக வெற்றி பெற்றார்.
குயின்வென் ஜெங்-ஆல் எந்த வகையிலும் அரினா சபலென்காவின் ஆட்டத்துக்கு ஈடு கொடுத்து ஆட முடியவில்லை. கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதிப் போட்டிக்கு முதல் முறையாக முன்னேறிய அவர் நேர் செட்களில் தோல்வியை தழுவினார். இந்த வெற்றி மூலம் தன் இரண்டாவது ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றார் அரினா சபலென்கா.
குயின்வென் ஜெங் மோசமாக தோற்றாலும் இந்த தொடரின் முடிவில் வெளியாகப் போகும் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் தரவரிசையில் அவர் முதல் 10 இடங்களுக்குள் இடம் பெற இருக்கிறார். அது அவருக்கு ஆறுதலாக அமைந்தது.


Click it and Unblock the Notifications