மெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றைப் பிரிவின் சாம்பியன் பட்டத்தை இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் தொடர்ந்து இரண்டாவது முறையாக கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறார். நடப்பு சாம்பியனாக இந்த தொடரில் ஜானிக் சின்னர் களமிறங்கினார்.
23 வயது ஆன ஜானிக் சின்னர் தற்போது உலகின் முதல் நிலை வீரராக விளங்கி வருகிறார். ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவை இறுதிப்போட்டியில் எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஜானிக் சின்னர் தன்னுடைய ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்த செட்டுகளை கைப்பற்றினார்.

முதல் செட்டை 6க்கு 3 என்ற கணக்கில் ஜானிக் சின்னர் கைப்பற்ற இரண்டாவது செட் டை பிரேக்கர் வரை சென்றது. இதில் இருவரும் அபாரமாக விளையாடினர். எனினும் சின்னர் இரண்டாவது செட்டை ஏழுக்கு ஆறு என கைப்பற்றினார். மூன்றாவது செட்டில் தன்னுடைய உத்வேகத்தை ஸ்வெரேவ் இழந்தார்.
இதன் மூலம் மூன்றாவது செட்டையும் 6க்கு 3 என்ற கணக்கில் சின்னர் கைப்பற்றினார். இதனை அடுத்து 6க்கு 3, 7க்கு6, 6க்கு 3 என்ற செட் கணக்கில் ஜானிக் சின்னர் வென்றார். இதன் மூலம் ஆஸ்திரேலியா ஓபன் தொடரை தொடர்ந்து இரண்டு முறை வென்ற இளம் வீரர் என்ற சாதனையை சின்னர் பெற்றிருக்கிறார்.1992, 93 ஆம் ஆண்டு ஜிம்மி கொரியர் என்ற வீரர் இளம் வயதில் தொடர்ந்து இரண்டு முறை ஆஸ்திரேலியா ஓபன் பட்டத்தை தொடர்ந்து வென்ற நிலையில் தற்போது அதனை சின்னர் முறியடித்து இருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் கடந்த ஆண்டு சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து தொடர்ந்து சின்னர் வெற்றியை பெற்று வருகிறார். கடைசியாக அவர் ஆடிய 37 போட்டிகளில் 36 ஆட்டங்களில் அவர் வெற்றியை பெற்றிருக்கிறார். மேலும் இத்தாலியைச் சேர்ந்த ஒரு வீரர் 3 கிராண்ட் ஸ்லாம் தொடரை வென்று இருப்பது இதுவே முதல் முறையாகும்.
சின்னர் கடந்த 2024 ஆஸ்திரேலியா ஓபன் பட்டத்தையும், அமெரிக்க ஓபன் பட்டத்தையும் வென்ற நிலையில் தற்போது மீண்டும் ஆஸ்திரேலியா ஓபன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறார். மேலும் தொடர்ந்து பத்து வீரர்களை நேர் கணக்கில் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்திருக்கிறார். ஜெர்மனி வீரர் ஸ்வெரேவ் இதுவரை மூன்று முறை கிராண்ட் ஸ்லாம் பைனலுக்கு வந்து தோல்வியை தழுவி இருக்கிறார். வெற்றி பெற்றுள்ள சின்னருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 19 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டிருக்கிறது.