மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை கஜகாஸ்தான் வீராங்கனை எலெனா ரிபாகினா வென்றார். இறுதிப் போட்டியில், உலகின் முதல் நிலை வீராங்கனையான பெலராஸின் அரியானா சபலென்காவை 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்து தனது முதல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், ஒட்டுமொத்தமாக இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் வென்றார். இந்த வெற்றி, கடந்த 2023 ஆம் ஆண்டின் இறுதிப் போட்டியில் சபலென்காவிடம் ரிபாகினா அடைந்த தோல்விக்கு பழிதீர்ப்பதாக அமைந்தது.
வெற்றி பெற்ற எலானா ரிபாகினாவுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 25 கோடியே 25 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. போட்டியின் இறுதி செட்டான மூன்றாவது செட்டில், ரிபாகினா 3-0 என பின்தங்கிய நிலையிலிருந்து முறையில்அபாரமான மீண்டு வந்து வெற்றி பெற்றது இந்த ஆட்டத்தின் திருப்புமுனையாகும். விம்பிள்டன் 2022 பட்டத்திற்குப் பிறகு, ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்திற்காக களமிறங்கிய ரிபாகினா, இந்தப் போட்டியை தன் கட்டுப்பாட்டை தக்கவைத்துக் கொண்டார்.

தோல்வியால் சபலென்கா தனது இருக்கையில் அமர்ந்து கண்ணீர் சிந்தினார். மூன்றாவது செட்டில் 3-0 என முன்னிலையில் இருந்தபோதும், வெற்றி எப்படி கைநழுவியது என்று அவர் சோகமடைந்தார். .2001 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் சாம்பியனான ஜெனிபர் காப்ரியாட்டி கோப்பையை வழங்கினார்.
"இந்த நம்பமுடியாத சாதனைக்காக" ரிபாகினாவை சபலென்கா வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும் "அடுத்த ஆண்டு எனக்கு ஒரு சிறந்த ஆண்டாக இருக்கும் என்று நம்புகிறேன்" என தனது ஏக்கத்தை வெளிப்படுத்தினார். தான் சந்தித்த இறுதிப் போட்டித் தோல்விகளின் போது தன்னுடன் உறுதுணையாக இருந்த தனது குழுவினருக்கும் அவர் இந்த தருணத்தில் நன்றி கூறினார்.
சபலென்கா நான்கு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றிருந்தாலும், நான்கு இறுதிப் போட்டித் தோல்விகளையும் சந்தித்துள்ளார். மூன்றாவது செட்டில் சபலென்கா 3-0 என முன்னிலையில் இருந்தபோது, ரிபாகினாவின் பயிற்சியாளர் "கவலைப்பட வேண்டாம், பாசிட்டிவ் ஆக இருங்கள், அடித்துக் கொண்டே இருங்கள்" என அறிவுறுத்தினார். இந்த அறிவுரைகளைக் கேட்ட ரிபாகினா, சபலென்காவின் சர்வீஸ்களை உடைத்து, 3-3 என சமநிலையை எட்டினார்.
ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் ரிபாகினா அபாரமாக விளையாடினார். ஒரு கட்டத்தில் சபலென்கா ஏமாற்றத்துடன் தன் கைகளை அசைத்ததும், ராக்கெட்டை மைதானத்தில் அடித்ததும் அவர் எவ்வளவு அழுத்தத்தில் இருந்தார் என்பதைக் காட்டியது. இது ரிபாகினாவுக்கு கூடுதல் உத்வேகத்தை அளித்து அவரது வெற்றியை எளிதாக்கியது.
சபலென்காவின் இந்தத் தொடர் மற்றும் இந்த ஆண்டு முழுவதும் ஒரு செட் கூட இழக்காத சாதனையை முடிவுக்குக் கொண்டுவந்தார். இறுதிப் போட்டிக்கு வரும் இந்தப் பயணத்தில் ரிபாகினா உலகின் நம்பர் 2 வீராங்கனையான இகா ஸ்வியாடெக் மற்றும் நம்பர் 6 ஜெசிகா பெகுலா போன்ற தலைசிறந்த இரண்டு வீராங்கனைகளைத் தோற்கடித்து இருந்தார். மூன்று மாதங்களுக்கு முன்பு ரியாதில் நடைபெற்ற WTA இறுதிப் போட்டியில் ரிபாகினா, சபலென்காவை 6-3, 7-6 (0) என்ற செட் கணக்கில் தோற்கடித்து தனது இரண்டாவது பெரிய பட்டத்தை வென்றிருந்தார்.
முன்னதாக, மெல்போர்னில் நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவில் பிரிட்டனைச் சேர்ந்த நீல் ஸ்கப்ஸ்கி மற்றும் அவரது அமெரிக்க கூட்டாளியான கிறிஸ்தியன் ஹாரிசன் ஆகியோர் தங்களது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றனர். அவர்கள் ஆஸ்திரேலியாவின் ஜேசன் குப்லர் மற்றும் மார்க் போல்மான்ஸ் ஜோடியை 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினர்.