மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் அரையிறுதிப் போட்டிக்கு தான் அதிர்ஷ்டவசமாக தகுதி பெற்று விட்டேன் என்றும், உண்மையில் லோரென்சோ முசெட்டிதான் அங்கு இருக்க வேண்டியவர் என்று டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் கூறியுள்ளார். 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஜோகோவிச், காலிறுதிப் போட்டியில் ஐந்தாம் நிலை வீரரான முசெட்டி காயம் காரணமாக விலகியதால் வெற்றி பெற்றார்.
போட்டியின் முதல் இரண்டு செட்களை முசெட்டி 6-4, 6-3 என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார். ஆனால், மூன்றாவது செட்டின் மூன்றாவது கேமில் ஜோகோவிச் சர்வீஸை முறியடித்த பிறகு, தனது வலது காலின் மேல்பகுதியில் ஏற்பட்ட காயத்திற்குச் சிகிச்சை பெற மருத்துவ உதவிக்காக நேரம் கேட்டார். 23 வயதான இத்தாலி வீரர் கிட்டத்தட்ட இரண்டு செட் வென்ற நிலையில் தொடர்ந்து விளையாட முடியவில்லை.

3வது செட்டில் ஜோகோவிச் 3க்கு1 என்ற கேம் கணக்கில் முன்னிலையில் இருந்தார். அப்போது முசெட்டி தனது முகத்தைத் துடைத்துக்கொண்டு, வலைப்பகுதிக்கு நடந்து சென்று ஜோகோவிச்சிடம் கைகொடுத்து, தன்னுடைய விலகலை அறிவித்தார். "தற்போது நான் எப்படி உணர்கிறேன் என்பதை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்த நேரத்தில் இந்த காயம் எனக்கு எவ்வளவு கடினமானது எனத் தெரியவில்லை," என்று முசெட்டி மனம் உருகக் கூறினார்.
"எனது வலது காலில் ஏதோ ஒரு அசாதாரண உணர்வு ஏற்பட்டது. நான் மிகவும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்ததால் தொடர்ந்து விளையாடினேன். ஆனால் வலி அதிகரிப்பதையும், பிரச்சனை நீங்கவில்லை என்பதையும் உணர்ந்தேன்" என தனது காயத்தைப் பற்றி விளக்கினார். ஜோகோவிச், தனது 11வது ஆஸ்திரேலிய பட்டத்தையும், 25வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வெல்லும் முனைப்பில் அரையிறுதிக்கு முன்னேறினார்.
இது குறித்து பேசிய ஜோகோவிச், "இது எனக்கு சில முறை நிகழ்ந்துள்ளது. ஆனால், ஒரு கிராண்ட்ஸ்லாம் காலிறுதியில், இரண்டு செட்கள் முன்னிலை பெற்று விலகுவது முசெட்டிக்கு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இன்று அவர்தான் வென்றிருக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டார்.கடந்த ஆண்டும் இதேபோன்ற காயம் காரணமாக ஃப்ரெஞ்ச் ஓபன் அரையிறுதியில் கார்லோஸ் அல்கராஸ்க்கு எதிராக முசெட்டி விலகியது குறிப்பிடத்தக்கது.
"அவருக்காக நான் உண்மையில் வருந்துகிறேன்," என்று ஜோகோவிச் கூறினார். "அவர் மிகச் சிறந்த வீரராக இருந்தார். வெறும் அதிர்ஷ்டத்தால் தான் நான் இப்போது இங்கு நிற்கிறேன். இல்லை என்றால் வீட்டில் இருந்திருப்பேன்" என்று கூறினார்.அரையிறுதியில், எட்டாம் நிலை வீரரான பென் ஷெல்டன் மற்றும் இரண்டு முறை ஆஸ்திரேலியன் ஓபன் சாம்பியனான ஜானிக் சின்னர் இடையே நடைபெற்ற போட்டியின் வெற்றியாளரை ஜோகோவிச் எதிர்கொள்வார். ஏற்கனவே 4வது சுற்று போட்டியில் எதிர் வீரர் காயம் காரணமாக வெளியேறிய நிலையில் தான் ஜோகோவிச் காலிறுதிக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.