ஹெல்சின்கி: இந்திய டென்னிஸ் உலகில் புதிய நட்சத்திரமாக உதித்து இருக்கிறார் தமிழகத்தை சேர்ந்த தட்சிணேஷ்வர் சுரேஷ். டேவிஸ் கோப்பைத் தொடரில் நெதர்லாந்துக்கு எதிராக ஒற்றை ஆளாக நின்று, இந்திய அணிக்கு ஒரு வரலாற்று வெற்றியைத் தேடித்தந்துள்ளார் மதுரையைச் சேர்ந்த இந்த 25 வயது இளைஞர்.
டேவிஸ் கோப்பை உலக குரூப் சுற்றில் இந்திய அணி, பலம் வாய்ந்த நெதர்லாந்தை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறுவது கடினம் என்றே பலரும் கணித்திருந்தனர். ஆனால், யாருமே எதிர்பாராத ஒரு ஹீரோவாக உருவெடுத்து, ஆட்டத்தின் போக்கையே மாற்றிக் காட்டினார் "டிகே" என்று செல்லமாக அழைக்கப்படும் தட்சிணேஷ்வர் சுரேஷ்.

இந்தத் தொடரில் தட்சிணேஷ்வர் விளையாடிய மூன்று போட்டிகளிலுமே வெற்றி பெற்று, இந்திய அணிக்கு 3-2 என்ற கணக்கில் ஒரு மகத்தான வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். இரண்டு ஒற்றையர் ஆட்டங்கள் மற்றும் யூகி பாம்ப்ரியுடன் இணைந்து ஒரு இரட்டையர் ஆட்டம் என அனைத்திலும் அவரே வெற்றி வாகை சூடினார். இதன் மூலம் 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு, டேவிஸ் கோப்பையின் புதிய வடிவில் இந்திய அணி முதல் முறையாக தகுதிச் சுற்று 2-க்கு முன்னேறியுள்ளது.
போட்டியின் வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசி ஐந்தாவது ஆட்டத்தில், கய் டி ஓடனை எதிர்கொண்ட தட்சிணேஷ்வர், எந்தப் பதற்றமும் இல்லாமல் 6-4, 7-6 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். வெற்றிப் புள்ளியைப் பெற்றதும், மகிழ்ச்சியில், களைப்பிலும் தரையில் மல்லாந்து படுத்துவிட்டார். உடனடியாக சக வீரர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு கொண்டாடினர். இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய யூகி பாம்ப்ரி, "அவர் எங்களை எல்லாம் சாதாரண மனிதர்களாக உணர வைத்துவிட்டார்" என்று புகழ்ந்தார்.
இந்தியாவின் புதிய டென்னிஸ் ஹீரோவாக உருவெடுத்துள்ள இந்த தட்சிணேஷ்வர் சுரேஷ், தமிழ்நாட்டின் மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர். 6 அடி 5 அங்குலம் உயரம் கொண்ட இந்த வலது கை ஆட்டக்காரர், தனது ஆட்ட பாணியால் அனைவரையும் கவர்ந்துள்ளார்.
வழக்கமாக இந்திய டென்னிஸ் வீரர்கள் வலைக்கு அருகே வந்து ஆடும் நுணுக்கமான ஆட்டத்திற்குப் பெயர் பெற்றவர்கள். ஆனால் தட்சிணேஷ்வர், ஆடுகளத்தின் பின்புறமிருந்து சக்திவாய்ந்த ஷாட்களை ஆடும் நவீன கால வீரராகத் திகழ்கிறார். இவரது பலமே, பந்தை வேகமாக பாயச்செய்யும் சர்வ் மற்றும் வேகமான ஃபோர்ஹேண்ட் ஷாட்கள்தான்.
தட்சிணேஷ்வரின் டென்னிஸ் பயணம் மற்ற இந்திய வீரர்களிடமிருந்து சற்று வித்தியாசமானது. இவர் அமெரிக்காவின் கல்லூரி டென்னிஸ் முறையில் பயிற்சி பெற்றுத் தன்னை வளர்த்துக்கொண்டவர். ஜார்ஜியா குயின்நெட் கல்லூரியில் தனது பயணத்தைத் தொடங்கினார் அவர், பின்னர் அமெரிக்காவின் மிக வலுவான டென்னிஸ் பயிற்சி மையங்களில் ஒன்றான வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழகத்தில் இணைந்தார்.
தொடர்ச்சியான போட்டிகள் மற்றும் குழுவாகச் செயல்படும் அழுத்தம் நிறைந்த கல்லூரி டென்னிஸ் முறை, அவரது உடல் தகுதியையும், மன உறுதியையும் பட்டை தீட்டியது. பெரிய போட்டிகளில் நெருக்கடியான சூழல்களைக் கையாளும் பக்குவத்தை அவர் அங்குக் கற்றுக்கொண்டார். அதுவே டேவிஸ் கோப்பையில் வெளிப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாகவே தொழில்முறை டென்னிஸில் சீரான வளர்ச்சியைப் பெற்று வந்தாலும், 2025ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பெங்களூரு ஓபன் தொடரில் பெற்ற வெற்றிகள் அவருக்குப் பெரும் திருப்புமுனையாக அமைந்தன. அந்தத் தொடரில் தன்னைவிட அதிகத் தரவரிசையில் இருந்த டுஜே அஜ்டுகோவிச்சை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இந்தத் தொடர் வெற்றிகளின் மூலம் உலகத் தரவரிசையில் முதல் 500 இடங்களுக்குள் நுழைந்தார். இவரது வளர்ச்சியை அங்கீகரிக்கும் விதமாக, 2025ஆம் ஆண்டின் சிறந்த இந்திய டென்னிஸ் வீரர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
டேவிஸ் கோப்பையில் ஒரு வீரர் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெறுவது மிகவும் அரிதானது. இதற்கு முன்பு 2004ஆம் ஆண்டு ஜப்பானுக்கு எதிராக லியாண்டர் பயஸ் மட்டுமே இந்தச் சாதனையைச் செய்திருந்தார். தற்போது தட்சிணேஷ்வர் சுரேஷும் அந்தச் சாதனையாளர் பட்டியலில் இணைந்துள்ளார். கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்துக்கு எதிராகப் பெற்ற வெற்றிக்குப் பிறகு, தற்போது நெதர்லாந்தை வீழ்த்தியதன் மூலம் இந்திய டென்னிஸ் உலகில் உற்றுநோக்க வேண்டிய ஒரு புதிய நட்சத்திரமாக தட்சிணேஷ்வர் சுரேஷ் உருவெடுத்துள்ளார்.