சென்னை: ரோஹன் போபன்னா மற்றும் சோம்தேவ் தேவ்வர்மன் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா, டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலகச் சுற்றுக்குத் தகுதி பெற்று விட்டது.இன்று நடந்த மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் இந்தியாவின் ரோஹன் போபன்னாவும், சோம்தேவும் அதிரடியாக ஆடி இந்தியாவை உலகச்சுற்றுக்குக் கொண்டு போய் விட்டனர்.முன்னதாக வெள்ளிக்கிழமை நடந்த ஒற்றையர் ஆட்டங்கள் இரண்டிலும் இந்தியா தோல்வியைத் தழுவியிருந்தது. நேற்று காலை நடந்த இரட்டையர் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி ஜோடி வெற்றி பெற்று இந்தியாவை 1-2 என்ற கணக்கில் வைத்தது.இந்தநிலையில் இன்று மாற்று ஒற்றையர் ஆட்டங்கள் நடந்தன. இதில், இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3-2 என்ற கணக்கில் இந்தியா வென்று உலகச் சுற்றுக்குத் தகுதி பெற்றது.சோம்தேவ் தான் ஆடிய போட்டியில் பிரேசில் வீரர் தாமஸ் பெலுச்சியை 7-6 (3), 4-0 என்ற செட்களில் முன்னணியில் இருந்தபோது பெலுச்சி விலகிக் கொண்டார். இதனால் சோம்தேவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மற்றொரு போட்டியில் மெல்லோவை, ரோஹன் போபன்னா வென்றார்.