லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டி அரை இறுதியில் ரபேல் நடாலை வென்று, 5வது முறையாக பைனலுக்கு நுழைந்துள்ளார் செர்பியாவின் நவாக் ஜோகோவிச்.
கிராண்ட் ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆடவர் பிரிவு ஒற்றையரில் நடப்பு சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 9வது முறையாக பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கால் இறுதியில் தென்னாப்பிரிக்காவின் கெவின் ஆன்டர்சனிடம் அவர் தோல்வியடைந்து வெளியேறினார். நேற்று நடந்த அரை இறுதியில் கெவின் ஆன்டர்சன், 6 மணி நேரத்துக்கு மேலாகப் போராடி, அமெரிக்காவின் ஜான் இஸ்னரை 7-6, 6-7, 6-7, 6-4, 26-24 என்ற செட்களில் வென்று பைனல் நுழைந்தார்.
நேற்று நடந்த மற்றொரு அரை இறுதியில் ஸ்பெயினின் ரபேல் நடால், செர்பியாவின் ஜோகோவிச் மோதினர். முதல் மூன்று செட்களில் 6-4, 3-6, 7-6 என ஜோகோவிச் முன்னிலையில் இருந்தார்.
முதல் அரையிறுதி அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், இரண்டாவது அரையிறுதி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இன்று அந்த ஆட்டம் மீண்டும் துவங்கியது.
மிகவும் கடுமையாகவும், பரபரப்பாகவும் நடந்த இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-4, 3-6, 7-6, 3-6, 10-8 என்ற செட்களில் வென்று பைனல் நுழைந்தார். 5 மணி நேரம் 14 நிமிடங்களுக்கு இந்த ஆட்டம் நீடித்தது.
2011, 2014, 2015 என மூன்று முறை விம்பிள்டன் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச், இதுவரை 12 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். தற்போது ஐந்தாவது முறையாக விம்பிள்டன் பைனல் நுழைந்துள்ளார்.
இதுவரை 17 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள நடால், 2008, 2010ல் விம்பிள்டன் வென்றார். 6 முறை விம்பிள்டன் பைனல் நுழைந்துள்ள நடால், 2011க்குப் பிறகு பைனல் வாய்ப்பை பெறவில்லை. 2011 பைனலில் ஜோகோவிச்சிடம் அவர் தோல்வியடைந்தார்.
நாளை நடக்கும் பைனலில் தென்னாப்பிரிக்காவின் கெவின் ஆன்டர்சனை சந்திக்கிறார் ஜோகோவிச். 2016 யுஎஸ் ஓபனுக்குப் பிறகு கிராண்ட் ஸ்லாம் பைனலில் ஜோகோவிச் விளையாட உள்ளார்.