ஐதராபாத் : தன்னுடைய 10வது ஆண்டு திருமண நாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா.
திருமண நாளையொட்டி தனது கணவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயிப் மாலிக்கிற்கு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
மேலும் எதிர்பார்ப்புக்கும் நடைமுறைக்கும் இடையிலான தனது 10 ஆண்டுகால திருமண வாழ்க்கை குறித்து அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, கடந்த 2010ல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2018ல் இஷான் என்ற குழந்தை பிறந்தது. குழந்தை பேற்றை அடுத்து கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஓய்வில் இருந்த சானியா மிர்சா கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று ஆடிவந்தார்.
கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரில் இரட்டையர் பிரிவில் நதியா கிச்செனாக்குடன் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்று தன்னுடைய மறுபிரவேசத்தை சிறப்பாக்கினார் சானியா மிர்சா.
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தற்போது வீட்டில் முடங்கியுள்ள சானியா, சமூக வலைதளங்களில் பரபரப்பாக இயங்கி வருகிறார். அவ்வப்போது தான் பயிற்சி செய்யும் வீடியோக்களையும், தன்னுடைய மகன் குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் அவர் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், தன்னுடைய 10வது ஆண்டு திருமண நாளையொட்டி தன்னுடைய கணவர் சோயிப் மாலிக்கிற்கு வாழ்த்துக்களை தெரிவித்த சானியா, எதிர்பார்ப்புக்கும் நடைமுறைக்கும் இடையிலான வாழ்க்கை குறித்த கேப்ஷனுடன், இருவேறு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனிடையே, அவரது திருமண நாளையொட்டி ரசிகர்கள் அவரை வாழ்த்து மழையில் நனையவிட்டனர்.