லண்டன்: அரியணைக்கு நான்கு கால்கள் இருப்பது போல் டென்னிஸ் விளையாட்டின் ராஜாவாக அரியணையில் அமர்வதற்கு 4 கிராண்ட்ஸ்லாம் தொடர்களிலும் வெற்றிபெற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதில் மிக உயரியதாக மதிப்பிடப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் லண்டனில் முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கிராண்ட்ஸ்லாம் தொடரில் காயம் காரணமாக நட்சத்திர ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் விலகியுள்ளார். இதனால் நோவக் ஜோகோவிச் பட்டம் வெல்லவே அதிக வாய்ப்புகள் உள்ளது.

நடப்பாண்டில்ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் தொடர்களில் வெற்றிபெற்றுள்ள ஜோகோவிச், அடுத்ததாக புல்தரை போட்டியான விம்பிள்டனிலும் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புகள் உள்ளது. இம்முறை விம்பிள்டன் தொடரில் பட்டம் வென்றால் அதிக முறை விம்பிள்டன் கோப்பையை சுவிஸ் முன்னாள் வீரர் ஃபெடரரின் சாதனையை சமன் செய்ய முடியும்.
ஆனால் ஜோகோவிச்சை வீழ்த்துவதற்காக பிரெஞ்சு ஓபனில் அடிபட்ட சிங்கமான கார்லஸ் அல்காரஸ் காத்திருக்கிறார். அதேபோல் மெத்வதேவ், ரூட், சிட்சிபாஸ், ரூப்ளவ் உள்ளிட்டோர் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்ல காத்திருக்கிறார்கள். ஜோகோவிச் தனது முதல் சுற்றில் 67ஆம் நிலை வீரரான அர்ஜென்டினாவின் பெட்ரோ காசினுடன் மோதுகிறார்.
விம்பிள்டன் தொடருக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.464 கோடியாகும். இது கடந்த ஆண்டை விட 11.2 சதவிகிதம் அதிகமாகியுள்ளது. ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வோருக்கு தலா ரூ.24.5 கோடியும், 2-வது இடத்தை பிடிப்போருக்கு ரூ.12.25 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது. இரட்டையர் பிரிவில் மகுடம் சூடும் ஜோடிக்கு ரூ..6.25 கோடி பரிசாக வழங்கப்படும். முதல் சுற்றில் தோல்வியை தழுவும் வீரர், வீராங்கனைக்கு கூட ரூ.57 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
விம்பிள்டன் தொடரில் முதல் நாள் ஆட்டத்திலேயே ஜோகோவிச், ஸ்வியாடெக், முன்னாள் சாம்பியன் அமெரிக்க மூத்த வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ், கேஸ்பர் ரூட் உள்ளிட்டோர் களம் இறங்குகிறார்கள். இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர், ஸ்டார் ஸ்போர்ட்ஸ்2, செலக்ட் 1, 2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.