ஹைதராபாத்: ஆயிஷாவுடனான திருமணப் பத்திரத்தில் (நிக்கநாமா) சோயப் மாலிக் கையெழுத்திட்டது உண்மைதான். ஆனால் சோயப் மாலிக் நினைத்திருந்த பெண் வேறு, ஆயிஷா வேறு என்பது அப்போது அவருக்குத் தெரியாது. வேறு ஒரு பெண்ணின் புகைப்படத்தைக் காட்டி மோசடி நடத்தப்பட்டது என்று கூறியுள்ளார் சோயப் மாலிக்கின் வக்கீல் ரமேஷ் குப்தா.சோயப் மாலிக் - ஆயிஷா சித்திக்கி விவகாரம் தொடர்பாக ரமேஷ் குப்தா கூறுகையில், 2002ம் ஆண்டு திருமணப் பத்திரத்தில் சோயப் மாலிக் கையெழுத்திட்டது உண்மைதான். ஆனால் சோயப்பிடம் காட்டப்பட்ட புகைப்படத்தில் இருந்த பெண் வேறு, ஆயிஷா வேறு என்பது அப்போது அவருக்குத் தெரியாது.தனக்கு அனுப்பப்பட்ட புகைப்படத்தில் இருக்கும் பெண்ணைத்தான் மணக்கிறோம் என்று நினைத்துதான் நிக்கநாமாவில் கையெழுத்திட்டார் சோயப் மாலிக். ஆனால் அவர் வேறு,ஆயிஷா வேறு என்பது பின்னர்தான் தெரிய வந்தது.இது சட்டப்பூர்வமான திருமணமாக கருதப்பட்டாலும் கூட இதனால் சானியாவுடனான திருமணத்திற்கு சட்டரீதியாக சிக்கல் ஏதும் வராது. காரணம், சோயப் மாலிக் சார்ந்த மதத்தில், முதல் மனைவியின் சம்மதம் பெறாமலேயே ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை செய்ய முடியும் என்றார் குப்தா.திட்டமிட்டபடி கல்யாணம் - சோயப் மாலிக் இதற்கிடையே, திட்டமிட்டபடி ஏப்ரல் 15ம் தேதி சானியாவுடன் திருமணம் நடைபெறும் என சோயப் மாலிக் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் ஹைதராபாத்தில் தெரிவிக்கையில், கடந்த 2001ம் ஆண்டுதான் ஆயிஷாவுடன் தொலைபேசி மூலம் தொடர்பு ஏற்பட்டது. அவரை நான் நேரில் சந்தித்ததே இல்லை.ஆயிஷா என்று கூறி அழகான பெண் ஒருவரின் புகைப்படத்தைக் காட்டி அவரது குடும்பத்தினர் ஏமாற்றியதே உண்மை. 2 ஆண்டுகளுக்கு முன்பே இதுதொடர்பாக அவர்களுக்கு நோட்டீஸ் அளித்து அந்தப் பிரச்சினை சரி செய்யப்பட்டு விட்டது.சானியா மிர்ஸாவைத்தான் நான் முதல் முறையாக மணக்கப் போகிறேன். அவர் தான் எனது முதல் மனைவி. திட்டமிட்டபடி ஏப்ரல் 15ம் தேதிதான் கல்யாணம் நடைபெறும். அதற்கு முன்பாக நடைபெறும் என்று கூறுவது தவறானது. நான் ஏப்ரல் 15ம் தேதி வரை ஹைதராபாத்தில்தான் தங்கியிருப்பேன். திருமண ஏற்பாடுகளை பார்த்துக் கொள்வேன்.ஆயிஷா சித்திக்கி விவகாரத்தை எனது வக்கீல் பார்த்துக் கொள்வார். சட்ட ரீதியாக அதை சந்திப்பேன்.திருமணத்திற்குப் பின்னரும் சானியா மிர்ஸா, இந்தியாவுக்காக தொடர்ந்து டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்பார். நானும், எனது குடும்பத்தனரும் சானியாவுக்கு ஆதரவாக இருப்போம்.ரகசியத் திருமணம்...?இதற்கிடையே, சானியா மிர்ஸாவின் வீட்டில் கொண்டாட்டங்கள் களை கட்டியிருப்பதால், அவருக்கும் சோயப் மாலிக்குக்கும் ரகசியக் கல்யாணம் நடந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்குக்கும், சானியா மிர்ஸாவுக்கும் திருமணம் என சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆயிஷா சித்திக்கி என்பவரின் குடும்பத்தினர் புதிய சர்ச்சையை எழுப்பினர்.ஆயிஷாவுடன் சோயப்புக்கு கல்யாணமாகி விட்டது. அவர் விவாகரத்து கொடுத்து விட்டுத்தான் சானியாவை மணக்க வேண்டும் என்று கூறிய ஆயிஷாவின் குடும்பத்தினர் இதுதொடர்பாக திருமணச் சான்றிதழையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். விவாகரத்து செய்யாமல் சானியாவை மணக்க சோயப் முயன்றால் போலீஸில் புகார் கொடுப்போம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.சோயப், சானியா திருமணம் ஏப்ரல் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திடீரென சோயப் மாலிக் நேற்று முன்தினம் ஹைதராபாத் வந்தார். நேராக சானியாவின் வீட்டுக்குச் சென்றார். மொட்டை மாடியில் நின்றபடி செல்போனில் தீவிரமாக பேசியபடி அவர் கணப்பட்டார். அதேசமயம், சானியாவும், அவரது தாயாரும் தீவிரமாக வாதம் செய்தபடி நின்றதை ஜன்னல் வழியாக காண முடிந்தது.இவற்றையெல்லாம் சானியா வீட்டுக்கு வெளியே குவிந்துள்ள மீடியாக்காரர்கள் பார்த்தபடி இருந்தனர். பாதுகாப்புக்காக போலீஸாரும் சானியா வீட்டின் முன்பு குவிக்கப்பட்டுள்ளனர். சானியா குடும்பத்தினர் கோரியபடி பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் நேற்று இரவு சானியா விட்டுக்கு அவரது உறவினர்கள், நண்பர்கள் என பலரும் வந்தனர். வீட்டினுள் கொண்டாட்டம் களை கட்டியிருந்தது. மகிழ்ச்சி தாண்டவமாடியது. இதனால் சானியா சோயப் இடையே ரகசியமாக முன்கூட்டயே கல்யாணம் நடந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.மேலும் ஏப்ரல் 15ம் தேதியன்று கல்யாணத்திற்குப் பதில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது. நேற்று இரவு சானியாவும், சோயப்பும் நடனமாடியதாகவும், அவரது உறவினர்கள், நண்பர்கள் அதைக் கண்டு களித்த்தாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதை சானியா தரப்பு நட்பு வட்டாரமும் உறுதி செய்துள்ளது.இதற்கிடையே, ஆயிஷா தரப்பில், சோயப் மாலிக் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க தீவிரமாக இறங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.