செர்பியா வீராங்கனையும் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான அனா இவானோவிச் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உலகதர உயர்நிலைப் போட்டிகளில் தன்னால் இனி விளையாட முடியாது என்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பெல்கிரேடு செர்பிய வீராங்கனையும் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான அனா இவானோவிச் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உலகதர உயர்நிலைப் போட்டிகளில் தன்னால் இனி விளையாட முடியாது என்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

செர்பிய நாட்டைச் சேர்ந்தவர் டென்னிஸ் வீராங்கனையான அனா இவானோவிச். 29 வயதான அவர் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2008-ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் சாம்பியன் பட்டம் பெற்று, தரவரிசையில் முதலிடம் பெற்றார். இதன் மூலம் கிரான்ட் ஸ்லாம் பட்டம் பெறும் முதல் செர்பிய வீராங்கனை என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆவர்.
12 வாரங்கள் தொடர்ந்து நம்பர் 1 இடம் வகித்த இவர் 15 மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார். டென்னிஸில் அதிகம்பேர் ரசிக்கும் வீராங்கனை யார் என்று 2015ம் ஆண்டில் ஆங்கில பத்திரிகை ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் இவர் முதலிடத்தைப் பிடித்திருந்தார்.
முன்னணி வீராங்கனையாக வலம் வந்த இவானோவிச் சமீப காலமாக தொடர் தோல்விகளால் தரவரிசையில் பின் தங்கியிருந்தார். இந்த நிலையில் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
தற்போது ஓய்வை அறிவிப்பதை தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ள இவானோவிச்,இது ஒரு கடினமான முடிவு என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கொண்டாட இன்னும் நிறைய விஷயங்கள் இருப்பதாகவும் இவானோவிச் குறிப்பிட்டுள்ளார்.
டென்னிஸ் மூலம் தான் கனவிலும் எதிர்பாராத வெற்றிகளையும் பாராட்டுகளையும் பெற்றதாகவும், தனக்கு ஆதரவளித்த குடும்பத்தினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், ஸ்பான்ஸ்சர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது தரவரிசைப் பட்டியலில் 63 ஆம் இடத்தில் உள்ள அனா இவானோவிச் இந்த ஆண்டுதான், ஜெர்மனியின் முன்னாள் கால்பந்து வீரர் பாஸ்டியன் ஸ்வச்வெய்டிஜரை திருமணம் செய்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.