பாரீஸ் : 2023ஆம் ஆண்டின் 2வது கிராண்ட் ஸ்லாம் தொடரான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை நட்சத்திர வீரர் ஜோகோவிச் 3வது முறையாக கைப்பற்றினார். இதன் மூலம் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 23வது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை ஜோகோவிச் படைத்தார்.
பாரீஸ் நகரில் நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டியில் வென்றதன் மூலம் மீண்டும் உலகின் நம்பர் 1 விரர் என்ற பெருமையை ஜோகோவிச் பெற்றார். இந்தப் போட்டிக்கு முன்பு நடாலும், ஜோகோவிச்சும் 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று சமநிலையில் இருந்தனர்.

இந்த நிலையில், இன்று ஜோகோவிச்சின் உலக சாதனையை பார்ப்பதற்காக பல்வேறு நட்சத்திரங்கள் இந்தப் போட்டியை நேரில் கண்டு களித்தனர். குறிப்பாக, கால்பந்து விரர் கெலியான் எம்பாப்பே, சால்டன் இப்ராஹிமுச் ஆகியோர் பார்வையாளர்கள் மாடத்தை அலங்கரித்தனர்.
இறுதி போட்டியில் உலகின் 4ஆம் நிலை வீரரான நார்வேவை சேர்ந்த கேஸ்பர் உடன் ஜோகோவிச் மோதினார். இவர்கள் இருவரும் ஏற்கனவே 4 முறை மோதி இருக்கிறார்கள் இதில் ஒரு முறை கூட கேஸ்பர் வென்றது இல்லை. ஆட்டத்தின் தொடக்கத்தில் ஸ்பர் அதிரடியாக விளையாடி 3க்கு0 என்று முன்னிலை பெற, ஜோகோவிச் தனது அனுபவ ஆட்டத்தின் மூலம், ஆக்கோரஷமாக செயல்பட்டு, கேஸ்பரை முந்தினர்.
முதல் செட்டே சுமார் ஒரு மணி நேரத்தில் மேல் சென்றது. இருவரும் 6க்கு6 என்று சமனில் இருக்க, டை பிரேக்கர் முறையில் ஜோகோவிச் முதல் செட்டை தனதாக்கினார். இரண்டாவது செட்டில் வழக்கம் போல் ஜோகோவிச் ஆதிக்கம் செலுத்தினார். ஜோகோவிச்சின் அனல் பறக்கும் ஆட்டத்திற்கு கேஸ்பரால் ஈடு கொடுக்க முடியவில்லை. இதனால் ஜோகோவிச் 6க்கு3 என்ற செட் கணக்கில் வென்றார்.
3வது செட்டை ஜோகோவிச் வென்றால் ஆட்டமே முடிந்துவிடும் என்பதால், இம்முறை கேஸ்பர் ஒரு செட்டையாவது கைப்பற்ற வேண்டும் என்று கடுமையாக போராடினார். ஆனால் எதிர் இருப்பது பல ஜாம்பவான்களையே ஓட் விட்ட ஜோகோவிச் என்பதால், 24 வயதான கேஸ்பரால், ஈடு கொடுக்க முடியவில்லை.
3 மணி நேரம் 13 நிமிடம் நீடித்த இந்தப் போட்டியில ஜோகோவிச் 7க்கு6, 6க்கு3, 7க்கு5 என்ற நேர் செட் கணக்கில் வென்று ஜோகோவிச் 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலம், 36 வயதில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்ற வயதான வீரர் என்ற பெருமையை ஜோகோவிச் பெற்றார்.
மேலும், ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் குறைந்மபட்சம் மூன்று முறை வென்ற முதல் வீரர் என்ற சாதனையும் ஜோகோவிச்சுக்கு சொந்தமானது. தற்போது ஓட்டுமொத்த டென்னிஸ் உலகிலும், ஜோகோவிச், 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று செரீனா வில்லியம்ஸ் சாதனையை சமன் செய்துள்ளார். 24 பட்டங்களுடன் மார்க்கரெட் கோர்ட் முதலிடத்தில் இருக்கிறார். ரோஜர் பெடரர் ஏற்கனவே ஓய்வு பெற்ற நிலையில், காயம் மற்றும் அறுவை சிகிச்சை காரணமாக நடால் இந்த தொடரில் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.