பாரீஸ் : கொரோனா வைரஸ் பீதி காரணமாக சர்வதேச அளவில் பல்வேறு பெரிய போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பிரெஞ்ச் ஓபனும் அந்த வரிசையில் வந்துள்ளது.
வரும் மே மாதம் 24 முதல் ஜூன் 7ம் தேதிவரை திட்டமிடப்பட்டிருந்த பிரெஞ்ச் ஓபன், தற்போது செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 4ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிரெஞ்ச் டென்னிஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ஊழியர்கள், வீரர்கள், ரசிகர்கள் ஆகியோரின் உடல்நலத்தை கவனத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உலக அளவில் 7.000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் மீண்டு வந்துள்ள சம்பவமும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அதிவேகமாக பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா பீதி காரணமாக சர்வதேச அளவில் பல்வேறு நிகழ்வுகள் குறிப்பாக விளையாட்டு நிகழ்வுகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
ரசிகர்களின் விருப்பத்திற்குரிய பல்வேறு தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டு அல்லது ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தாலும், பல்வேறு தரப்பினரின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த முடிவுக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்தியாவிலும் ஐபிஎல் தொடரை இந்த சூழலில் நடத்தக்கூடாது என்றும் சிலர் குரல்கொடுத்துள்ளனர்.
கொரோனா அச்சம் காரணமாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகளும் ஒத்திவைக்கப்படுவதாக பிரெஞ்ச் டென்னிஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வரும் மே மாதம் 24 முதல் ஜூன் 7ம் தேதிவரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த பிரெஞ்ச் ஓபன் தற்போது செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 4ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அசாதாரண சூழ்நிலையில், பிரெஞ்ச் ஓபன் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்வது கடினமானது என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் இந்த முடிவை பிரெஞ்ச் டென்னிஸ் கூட்டமைப்பு எடுத்துள்ளதாக அதன் தலைவர் பெர்னார்ட் கியுடிசெல்லி கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த வாரத்தில் ஆண்கள் டென்னிஸ் தொடர் உள்ளிட்ட அனைத்து தொடர்களையும் வரும் ஏப்ரல் 27ம் தேதிவரை ரத்து செய்வதாக ஏடிபி அறிவித்தது. இதேபோல பெண்கள் தொடரும் மே 2 வரை ரத்து செய்யப்படுவதாக டபள்யூடிஏ அறிவித்துள்ளது. அடுத்த மாதம் நடைபெறவிருந்த ஃபெட் கோப்பை இறுதிப்போட்டியும் நாள் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.