எனக்கென்னமோ டவுட்டாதான் இருக்கு.. சான்ஸே இல்லை.. சபாடினி இப்படி சொல்றாரே!
பியூனஸ் அயர்ஸ் : 2020ம் ஆண்டில் எந்த டென்னிஸ் போட்டியும் நடக்க வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார் அர்ஜென்டினாவைச் சேர்ந்த முன்னாள் வீராங்கனை கேபிரியலா சபாடினி.
முன்னாள் அமெரிக்க ஓபன் சாம்பியன் சபாடினி. ஒரு காலத்தில் ஸ்டெபி கிராப் உள்ளிட்டோருக்கு இணையாக வலம் வந்தவர். அதிரடி வீராங்கனையான சபாடினி இந்த வருடம் கொரோனாவைரஸ் காரணமாக டென்னிஸ் துறை சந்தித்து வரும் சவால்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள ஒரு வீடியோ பேட்டியில் இந்த வருடம் எந்த டென்னிஸ் போட்டியும் நடக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஒரு போட்டியும் நடக்காது
கொரோனாவைரஸ் காரணமாக இந்த வருட சீசன் சரியாக இருக்காது. போட்டிகள் நடப்பதும் சந்தேகம்தான். வரும் மாதங்களில் நிலைமை மேலும் கடினமானதாகவே இருக்கும் என்றே தெரிகிறது. நிலைமை சீரடையும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. எந்த விளையாட்டும் நடக்க வாய்ப்பும் இல்லை. எதிர்காலம் குறித்து நினைப்பதே கஷ்டமாக இருக்கிறது. எது நடக்கும் என்பதையும் கணிக்க முடியவில்லை என்று சபாடினி கூறியுள்ளார்.

மக்கள் சிரமத்தில் உள்ளனர்
மக்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர். அனைவரும் இயல்பு நிலைக்குத் திரும்பும்போதுதான் எல்லாமே இயல்புக்குத் திரும்ப வாய்ப்புள்ளது. அதுவரை போட்டிகளைத் தவிர்ப்பதே நல்லது. இது உலகளவிலான பிரச்சினை. அனைவரும் தற்போது முன்னுரிமை அளிக்க வேண்டியது, வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும் என்பதுதான். உடல் நலம் முக்கியம். இதைத் தாண்டி நாம் எதையும் செய்ய முடியாது. யோசிக்கவும் முடியாது என்றார் அவர்.

அவர் சொல்வதும் சரிதானே
சபாடினி 1996ம் ஆண்டு விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அதில் 1990ம் ஆண்டு அவர் அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றார். மேலும் 11 முறை மகளிர் ஒற்றையர் கிராண்ட் ஸ்லாம் அரை இறுதிப் போட்டிகளில் பங்கேற்றவர். சபாடினி சொல்வதைப் போலவே எந்தப் போட்டியையும் தற்போது நடத்த முடியவில்லை. விம்பிள்டன் ரத்தாகி விட்டது. பிரெஞ்சுப் போட்டிக்கும் அதே கதிதான். அமெரிக்க ஓபன் போட்டியும் நடைபெற வாய்ப்பில்லை.

சவாலில் விளையாட்டு உலகம்
கொரோனாவைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதுமே விளையாட்டுப் போட்டிகள் பெரும் சவாலை சந்தித்துள்ளன. எந்தப் போட்டியையும் நடத்த முடியவில்லை. கால்பந்து, கிரிக்கெட், டென்னிஸ் என எல்லாமே ஸ்தம்பித்துப் போய் விட்டது. இந்த நிலையில்தான், இந்த ஆண்டு எதுவும் நடக்க வாய்ப்பில்லை என்ற கருத்தை வைத்துள்ளார் சபாடினி.


Click it and Unblock the Notifications