சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் ஜோகோவிச்சை வீழ்த்தியதோடு, அரையிறுதி வரை முன்னேறியுள்ள தென் கொரிய வீரர் ஹையோன் சுங் இப்போது விளையாட்டு ஆர்வலர்களின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ளார்.
58ம் நிலை வீரரான ஹையோன் 4வது சுற்றில் 14ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச்சை வீழ்த்தி முன்னேறினார். ஆறுமுறை ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன் ஆனவர் ஜோகோவிச்.
7-6, 7-5 மற்றும் 7-6 என்ற நேர் செட்களில், ஜோகோவிச்சை தோற்கடித்து அசத்தினார் ஹையோன் சுங். இதன் மூலம் ஆஸ்திரேலிய ஓபன் கால் இறுதிக்கு முன்னேறிய முதல் தென் கொரிய வீரர் என்ற சாதனையை படைத்தார் ஹையோன்.
இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில், டென்னிஸ் சாண்ட்கிரெனை 6-4, 7-6 (7-5), 6-3 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். அரையிறுதியில் இவர் நடப்பு சாம்பியன், ரோஜர் பெடரரை சந்திக்க வாய்ப்புள்ளது.