ரோம் : இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்ஜியோஸ் அடாவடி செய்ததால், தொடரில் இருந்தே நீக்கப்பட்டார்.
நிக் கிர்ஜியோஸ் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். இதுவரை எந்த கிராண்ட்ஸ்லாம் பட்டமும் வெல்லாவிட்டாலும், வாயை கொடுத்து வம்பை விலைக்கு வாங்கி விடுவார்.

கடந்த சில நாட்கள் முன்பு உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்கள் ஜோகோவிக் மற்றும் ரபேல் நடால் குறித்து சர்ச்சைக்குரிய முறையில் பேட்டி அளித்தார்.
அது ஓய்ந்து முடிக்கும் முன், இத்தாலியன் ஓபன் தொடரில் பிரச்சனை செய்து வெளியேறி உள்ளார். அப்படி என்ன தான் செய்தார்?
இத்தாலியன் ஓபன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றில் காஸ்பர் ரூட் என்ற வீரரை சந்தித்தார் நிக். அந்தப் போட்டியில் முதல் இரண்டு செட்களின் முடிவில் இருவரும் 1-1 என சமநிலையில் இருந்தனர்.
மூன்றாவது சுற்றின் இடையே "லைன்" நடுவரை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார் நிக் கிர்ஜியோஸ். அதனால், அவருக்கு கேம் பெனால்டி அளிக்கப்பட்டது. அதனால், காஸ்பருக்கு ஒரு புள்ளி கிடைத்தது. இதனால், கோபமடைந்த நிக், ஆடுகளத்தை விட்டு வெளிப்புறம் வந்தார்.
அங்கே இருந்த தண்ணீர் குடுவையை எட்டித் தள்ளினார். தன் டென்னிஸ் ராக்கெட்டை தூக்கி தரையில் அடித்தார். ஒரு நாற்காலியை தூக்கி ஆடுகளத்துக்கு நடுவே வீசினார். நடுவர், உடனடியாக ரெப்ரீயை அழைத்தார். அவர் வருவதற்குள், தானே மூட்டை முடிச்சை கட்டிக் கொண்டே ரசிகர்களை பார்த்து கூச்சல் போட்டுக் கொண்டு வெளியேறினார்.
இந்த மோசமான நடவடிக்கையை அடுத்து நிக் கிர்ஜியோஸ்-ஐ இத்தாலியன் ஓபன் தொடரில் இருந்து தடை செய்தும், அபராதம் விதிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எல்லாம் செய்துவிட்டு தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் உணர்ச்சிவசப்பட்டு விட்டதாக பதிவு செய்துள்ளார். என்ன பதிவு போட்டு என்ன புண்ணியம்? டென்னிஸ் பிராக்டீஸ்-ல சேரை தூக்கி நடுவுல வீசவா கத்துத் தர்றாங்க?