சென்னை: சென்னையில் நடைபெற உள்ள ஓபன் டென்னிஸ் போட்டிக்கு ரூ2 கோடி நிதி உதவியை முதல்வர் ஜெயலலிதா வழங்கி உள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
டென்னிஸ் விளையாட்டில் உலகப் புகழ் பெற்ற விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ளும் மிக முக்கிய போட்டியான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தால் ஆண்டுதோறும் சென்னையில் நடத்தப்பட்டு வருகின்றது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2005-ம் ஆண்டு சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியினை சிறப்பாக நடத்திட முதன் முறையாக தமிழக அரசின் சார்பில் 1 கோடி ரூபாய் நிதி வழங்கினார்.
தமிழ்நாடு டென்னிஸ் சங்கம், 20.12.2013-ம் ஆண்டு நடத்தப்படவுள்ள சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை சிறப்பாக நடத்திட தமிழக அரசின் சார்பில் 2 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கிட வேண்டி முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்தது. அந்தக் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மக்களின் பெரும் வரவேற்பினை பெற்று உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரர்கள் பங்கு கொள்ளும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை சிறந்த முறையில் நடத்துவதற்கு தமிழக அரசின் சார்பில் 2 கோடி ரூபாயை கடந்த ஆண்டு வழங்கினார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய டென்னிஸ் விளையாட்டு அரங்கில் 30.12.2013 முதல் 5.1.2014 வரை நடைபெறவுள்ள சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை கடந்த ஆண்டைப் போன்றே சிறப்பான முறையில் நடத்திட 'லீட் பிளாட்டினம் ஸ்பான்சர்' என்ற வகையில் தமிழக அரசின் பங்களிப்பாக 2 கோடி ரூபாய் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரர்களோடு, இந்தியாவின் தலைசிறந்த டென்னிஸ் வீரர்களும் பங்கு கொள்ளும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியினை சிறந்த முறையில் நடத்துவதற்கு தமிழக அரசின் சார்பில் 2 கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் எம்.ஏ. அழகப்பனிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் முகமது நசீமுத்தின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் கே.ராஜாராமன், தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் முதன்மை செயல் அலுவலர் ஹிடன் ஜோஷி ஆகியோர் உடனிருந்தனர்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.