கராச்சி & ஹைதராபாத்: இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்படலாம் என்று அவரது தந்தை இம்ரான் மிர்சா தெரிவித்துள்ளார்.
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் இடது முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடியபோது இந்த காயம் ஏற்பட்டது. அது இன்னமும் குணமடையாததால் அவர் வலியால் அவதிப்பட்டு வருகிறார்.
தொடர்ந்து சிகிச்சை பெற்றும் இன்னும் சரியாகவில்லை. இந்நிலையில் அவருக்கு சிறப்பு ஊசி போடப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள் காயம் குணமடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியும் குணமாகவில்லை என்றால் அவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும் என்று அவரது தந்தை இம்ரான் மிர்சா தெரிவித்துள்ளார். ஏற்கனவே சானியாவுக்கு இரண்டு முறை முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தனது மாமனார், மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினரைக் காண்பதற்காக பாகிஸ்தான் போயுள்ளார் சானியா மிர்ஸா. கராச்சியில் தங்கியிருந்தபடி அவர் கணவர் குடும்பத்தாரைச் சந்தித்து வருகிறார்.