டேவிஸ் கோப்பைத் தொடர்.. கல்தா கொடுக்கப்படுகிறார் பயஸ்!
திருச்சூர்: டேவிஸ் கோப்பை உலகச் சுற்றுப் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து, மூத்த வீரர் லியாண்டர் பயஸுக்கு கல்தா கொடுக்கப்பட உள்ளது உறுதியாகி விட்டது.
தொழில்முறை டென்னிஸ் வீரராக, வௌ்ளிவிழாவைக் கண்டுள்ள, 44 வயதாகும் லியாண்டர் பயஸ், பல்வேறு கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள், சர்வதேச பட்டங்கள், ஒலிம்பிக்கில் வெண்கலம் என, அவர் வாங்கி குவித்த பட்டங்கள், கோப்பைகள் குறித்தே ஒரு தனி புத்தகம் வெளியிடலாம்.
ஆனால், பயஸுக்கும், அவருடைய நீண்ட நாள் நண்பர், இரட்டையர் போட்டி பார்ட்னரான மகேஷ் பூபதிக்கும் இடையே, பல ஆண்டுகளாக ஏழாம் பொருத்தமாக உள்ளது. டேவிஸ் கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக மகேஷ் பூபதி உள்ளார்.

கோபத்தில் பயஸ்
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி, பெங்களூரில் நடந்தது.
6 பேர் கொண்ட இந்திய அணியில் பயஸும் இருந்தார். ஆனால், போட்டியில் விளையாடிய, நான்கு பேரில் அவர் இடம்பெறவில்லை. கோபத்தில், மைதானத்தில் இருந்து அவர் வெளியேறினார். அதன்பிறகு, பூபதி தனது நிலை குறித்து பேஸ்புக்கில் விளக்கம் அளித்தார். ஆனால் பயஸ் கோபம் தணியவில்லை.

திருச்சூரில் தேர்வு
டேவிஸ் கோப்பை போட்டியில், செப்டம்பர் 15-17ல் கனடாவுக்கு எதிரான உலகச் சுற்றுப் போட்டியில் இந்தியா விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணித் தேர்வு, திருச்சூரில் நாளை நடக்க உள்ளது.

யூகி பாம்ப்ரிக்கு வாய்ப்பு
கடந்தப் போட்டியில் காயம் காரணமாக விளையாட முடியாத, யூகி பாம்ப்ரி, சாகேத் மைனேனி ஆகியோர், உடல்நலம் தேறியுள்ளதால், அவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்க உள்ளது.

பயஸுக்கு வாய்ப்பில்லை
ஆனால், தரவரிசையில், 62வது இடத்தில் உள்ள பயஸைவிட, முந்தியுள்ள ரோஹன் போபன்னா, திவிஜ் சரண், புருவ் ராஜா ஆகியோருக்கே அணியில் இடம்பெறும் வாய்ப்பு கிடைக்கும் என, தெரிகிறது. இதன் மூலம், பயஸுக்கு கல்தா கொடுப்பது உறுதியாகிவிட்டது.


Click it and Unblock the Notifications