ஆஸ்திரேலிய ஓபனில் வெளியேறினார் குட்டிப் பெண்
மெல்போர்ன்: கடும் வெயிலில் வீரர்கள் சோர்ந்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் அனைவரையும் கவனிக்க வைத்த, 15 வயது உக்ரைன் வீராங்கனை மார்டா கோட்ஸ்யுக், மூன்றாவது சுற்றில் வெளியேறினார்.
இந்த ஆண்டுக்கான கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் முதல் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் காயம் காரணமாக போட்டியில் பங்கேற்கவில்லை. பலர் முதல் இரண்டு சுற்றுகளில் வெளியேறினர்.

கடும் வெயில் கொளுத்தி வருவதால், ஆஸ்திரேலிய ஓபனில் பல முன்னணி வீரர்கள் திணறி வருகின்றனர். இந்த நிலையில், அனைவரையும் கவர்ந்தார், உக்ரைனைச் சேர்ந்த 15 வயதாகும் மார்டா கோட்ஸ்யுக்.
தரவரிசையில் இல்லாத அவர், மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். 1996ல் சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ்க்கு பிறகு, குறைந்த வயதில், ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் விளையாடியவர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.
டென்னிஸின் வருங்காலம் என்று அழைக்கப்படும், இந்த குட்டிப் பெண், மூன்றாவது சுற்றில், சகநாட்டு வீராங்கனையும், தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள எலினா ஸ்விடோலினாவிடம் 2-6, 2-6 என்ற செட்களில் தோல்வியடைந்தார்.
ஸ்விடோனினா, அடுத்து நடைபெறும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் செக் குடியுரசின் டெனிசா அலர்டோவாவை சந்திக்க உள்ளார்.
தரவரிசையில் 81வது இடத்தில் உள்ள குரேஷியாவின் பெட்ரா மார்டிக்கும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
ஆடவர் பிரிவில் பிரிட்டனின் கைல் எட்மண்ட், முதல் ஆளாக, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
Story first published: Friday, January 19, 2018, 19:22 [IST]
Other articles published on Jan 19, 2018


Click it and Unblock the Notifications