ஐதாராபாத்: இந்தியாவில் விளையாட்டுத்துறையில் மகளிர் சிறந்து விளங்குவது என்பது மிகவும் கடினமான காரியம். ஆனால் இப்படிப்பட்ட சூழலில் 20 ஆண்டுகளுக்கு மேல் மகளிர் டென்னிஸ் உலகில் கொடிகட்டி பறந்தவர் தான் சானியா மிர்சா.
மகளிர் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் பல கிராண்ட் ஸ்லாம் பட்டம், தரவரிசையில் முதல் நிலை வீராங்கனை என பல பெருமையை பெற்ற சானியா மிர்சா அண்மையில் ஓய்வு முடிவை அறிவித்திருந்தார். இந்த நிலையில் சானியா மிர்சாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு புயலே அடித்து வருகிறது.

சானியா மிர்சா கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சானியா மிர்சா, சோயிப் மாலிக் ஜோடி விவகாரத்து பெற்றது. இந்த நிலையில் சானியா மிர்சா மக்களுக்கு சேவை செய்யும் முடிவில் இருக்கிறார்.
இதற்காக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தெலுங்கானாவில் ஹைதராபாத் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக சானியா மிர்சா நிறுத்தப்படுவார் என்று செய்தி வெளியாகியுள்ளது. பிரபல கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகமான முகமது அசாருதீன் சானியா மிர்சாவின் பெயரை ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுவதற்கு பரிந்துரை செய்துள்ளார்.
ஏ ஐ எம் ஐ எம் கட்சியின் தலைவரான அசாதுதீன் ஓவைஷி கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் ஹைதராபாத் தொகுதியில் வெற்றி பெற்று வருகிறார். அவரை வீழ்த்துவது மிகவும் கடினமான காரியமாக அங்குள்ள அரசியல் கட்சிக்கு இருக்கிறது. இந்த நிலையில் பிரபலமான சானியா மிர்சாவை காங்கிரஸ் கட்சி சார்பாக ஹைதராபாத்தில் நிறுத்தினால் பெருமளவு ஓட்டுகள் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பி ஆர் எஸ் கட்சி சார்பாக கடம் ஸ்ரீனிவாஸ் யாதவும் பாஜக சார்பாக மாதவி லதாவும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் காங்கிரஸ் தன்னுடைய வேட்பாளர் பெயரை அறிவிக்கவில்லை. சானியா மிர்சா தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்பது இன்று அல்லது நாளை தெரிந்து விடும்.