டெல்லி : கொரோனா வைரஸ் காரணமாக தகுதி சுற்று போட்டிகளில் பங்கேற்காமல் உள்ள வீரர்கள், ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள முடியாத நிலையில் ஒலிம்பிக் போட்டிகள் தள்ளி வைக்கப்படுவதே சிறந்தது என்று இந்திய டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக டோக்கியோவில் வரும் ஜூலை 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதிவரை திட்டமிடப்பட்டுள்ள ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தன்னுடைய உறுப்பு நாடுகளுக்கு ஒலிம்பிக் குறித்த சில கேள்விகளை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அனுப்பியுள்ளது.
கொரோனா பாதிப்பால் சர்வதேச அளவில் பல நிகழ்வுகள் முடங்கியுள்ளன. குறிப்பாக விளையாட்டு உலகம் முற்றிலும் முடங்கியுள்ளது. பரபரப்பாக பல்வேறு தொடர்களில் பங்கேற்று, தங்களுக்கு ஓய்விற்கு வழியில்லை என்று புலம்பிவந்த விளையாட்டு வீரர்கள், தற்போது இந்த ஓய்வால் மிகவும் தனிமையை உணர்கிறார்கள். எப்படா இந்த கொரோனா அச்சத்திலிருந்து விடுபடுவோம் என்ற நிலைக்கு விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி உலகளவில் அனைவரும் உள்ளனர்.
இந்த கொரோனாவால் அனைத்து போட்டிகளும் ரத்து அல்லது ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், டோக்கியோவில் வரும் ஜூலை 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை திட்டமிடப்பட்டுள்ள ஒலிம்பிக் போட்டிகளும் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சர்வதேச அளவில் அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைக்கும் இந்த போட்டிகளை ரத்து அல்லது ஒத்திவைப்பதால் கடுமையான பாதிப்பு ஏற்படும்.
இந்நிலையில் இந்த போட்டிகள் துவங்குவதற்கு இன்னும் 4 மாதங்களுக்கு மேல் உள்ளதால், தற்போது போட்டிகளை ஒத்திவைக்கும் அறிவிப்பை வெளியிடுவது முதிர்ச்சியின்மையை காட்டும் என்று சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் தாமஸ் பாச் தெரிவித்துள்ளார். போட்டிகளை ஒத்தி வைப்பது பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தன்னுடைய உறுப்பு நாடுகளுக்கு கொரோனா பாதிப்புகள் குறித்த கேள்விகளை ஒலிம்பிக் கவுன்சில் அனுப்பியுள்ளது. அதுகுறித்து எந்த அறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை என்ற போதிலும், இந்த பதில்களை கொண்டே ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, கொரோனா பாதிப்பால் பல நாடுகள், தகுதி சுற்றுகளை நடத்த முடியாமல் உள்ள நிலையில், ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பதே சிறந்த பலனை அளிக்கும் என்று இந்திய டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி தெரிவித்துள்ளார். தகுதி சுற்றுகள் நடத்தப்படாத நிலையில், அதில் தேர்வாகாத வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாது என்பதால், இந்த போட்டிகள் ஒத்தி வைக்கப்படுவதே சிறந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.