சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலும் 'மேட்ச் பிக்ஸிங்'.... சிக்கும் சாம்பியன்கள்.... 'திடுக்' தகவல்கள்
மெல்போர்ன்: கிரிக்கெட் உலகை ஆட்டிப் படைக்கும் மேட்ச் பிக்ஸிங் விவகாரம் சர்வதேச டென்னிஸ் போட்டிகளையும் சுனாமியாக தாக்கியுள்ளது. இந்த மேட்ச் பிக்ஸிங்கில் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்களும் சிக்கியிருப்பதாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடராக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பிபிசி உள்ளிட்ட சர்வதேச செய்தி நிறுவனங்கள், 10 ஆண்டுகளாக டென்னிஸ் போட்டிகளில் மேட்ச் பிக்ஸிங் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக செய்திகள் வெளியிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

16 டாப் வீரர்கள்
அந்த செய்திகளில், 10 ஆண்டுகளாக டாப் 50 இடங்களில் உள்ள 16 வீரர்கள் இந்த மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டிருக்கலாம் எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அத்துடன் இந்த கருப்பு ஆடுகளில் சிலர் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்களுமாம்.

தொடர்ந்து ஆட அனுமதி
இந்த 16 வீரர்கள் தொடர்பாக டென்னிஸ் இண்டகெரட்டி யூனிட் அமைப்பின் கவனத்துக்கு கொண்டு சென்றிருந்த போதும் அந்த வீரர்கள் பலரும் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர் என்கிறது பிபிசி.

2007-ல் விசாரணை
இதேபோல் டென்னிஸ் சங்கமான ஏடிபி, 2007ல் உருவாக்கிய விசாரணை அமைப்பின் தகவல்களும் ஆதாரங்களாக உள்ளன என்கிறது பிபிசி.
2008-ல் 28 வீரர்கள் மீது சந்தேகம்
2008 ஆம் ஆண்டு 28 வீர்ர்கள் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக டென்னிஸ் சங்கமே விசாரணை நடத்திய போதும் அது முழுமையாக நடைபெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் விளையாட்டில்தான் மேட்ச் பிக்ஸிங் பேயாட்டம் போடுகிறது எனில் டென்னிஸையும் அது பதம் பார்த்திருப்பது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications