நான் முதலில் கருப்பினத்தை சேர்ந்தவள்.. நவோமி ஒசாகா போர்க்கொடி.. டென்னிஸ் உலகில் பரபரப்பு!
நியூயார்க் : அமெரிக்காவில் கருப்பினத்தவருக்கு எதிராக காவல்துறை நடந்து கொள்வதை கண்டித்து பிரபல டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா போர்க்கொடி தூக்கி இருக்கிறார்.
Recommended Video
வெஸ்டர்ன் அண்ட் சதர்ன் ஓபன் டென்னிஸ் தொடரின் அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ள அவர் தான் விலகுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
டென்னிஸ் உலகில் அவருக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில் வெஸ்டர்ன் அண்ட் சதர்ன் ஓபன் டென்னிஸ் தொடர் ஒரு நாள் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது.

கருப்பினத்தவருக்கு எதிராக காவல்துறை
அமெரிக்காவில் கருப்பினத்தவருக்கு எதிராக காவல்துறை நடந்து கொள்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. சில மாதங்கள் முன்பு கருப்பினத்தை சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக பிளாக் லைவ்ஸ் மேட்டர் என்ற சமூக வலைதள இயக்கம் துவங்கியது.

ஜேக்கப் பிளேக் மரணம்
இந்த நிலையில் அமெரிக்காவில் சில நாட்கள் முன்பு ஜேக்கப் பிளேக் என்ற கருப்பினத்தை சேர்ந்த ஒருவரை காவல்துறை சுட்டுக் கொன்றது. அதைக் கண்டித்து மீண்டும் போராட்டங்கள் துவங்கி உள்ளன. விளையாட்டு வீரர்கள் பலரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

போராட்டத்தை துவக்கி உள்ளார்
இந்த நிலையில் ஜப்பானிய வீராங்கனையான நவோமி ஒசாகா வெஸ்டர்ன் அண்ட் சதர்ன் ஓபன் டென்னிஸ் தொடரில் அரை இறுதிக்கு முன்னேறிய நிலையில் தன் போராட்டத்தை துவக்கி உள்ளார். தான் இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கருப்பினத்தை சேர்ந்தவள்
இது பற்றி அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் நான் விளையாட்டு வீராங்கனை என்ற அடையாளத்துக்கு முன் முதலில் கருப்பினத்தை சேர்ந்தவள். எனவே, சில விஷயங்களுக்கு உடனடியாக முக்கியத்துவம் தர வேண்டி உள்ளது. வெள்ளை இனத்தவர்கள் அதிகமாக இருக்கும் விளையாட்டில் என்னால் ஒரு விவாதத்தை துவக்க முடியும் என்றால் நான் சரியான பாதையில் தான் செல்கிறேன் என கூறி உள்ளார்.

வயிற்றை பிசைகிறது
மேலும், காவல்துறையின் கையில் கருப்பின மக்கள் சிக்கி மடிவதை காணும் போது வயிற்றை பிசைகிறது. ஒவ்வொரு குறிப்பிட்ட நாட்களுக்கும் ஒரு ஹாஷ்டேக் உருவாவதை கண்டு அயர்ச்சி ஏற்படுகிறது.இது எப்போது தான் முடியும்? என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

தள்ளி வைப்பு
நவோமி ஒசாகா முடிவை அடுத்து வெஸ்டர்ன் அண்ட் சதர்ன் ஓபன் டென்னிஸ் தொடர் நிர்வாகம் நவோமி ஒசாகாவிற்கு ஆதரவாக ஆகஸ்ட் 27 அன்று ஒருநாள் அரை இறுதி சுற்றை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளது. பிற டென்னிஸ் வீரர், வீராங்கனைகளும் நவோமிக்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications