டைட்டிலை வென்ற ஒசாகா
கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 27ம் தேதி ரோலண்ட் காரோசில் துவங்கவுள்ளது. யுஎஸ் தொடர் முடிந்த சில தினங்களிலேயே இந்த தொடர் துவங்கவுள்ள நிலையில் நடப்பு சாம்பியின் ஆஷ்லீ பார்டி இந்த தொடரில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு யுஎஸ் டைட்டிலை வென்றுள்ள நவோமி ஒசாகாவும் தற்போது தொடரிலிருந்து விலகல் முடிவை எடுத்துள்ளார்.
இறுதிப்போட்டியில் காயம்
கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்த யுஎஸ் ஓபன் மகளிர் தனிநபர் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அஸரெங்காவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார் நவோமி ஒசாகா. இந்த இறுதிப்போட்டியில் அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் பிரெஞ்ச் ஓபன் தொடரிலிருந்து விலகும் முடிவை அவர் எடுத்துள்ளார்.
விலகிய நவோமி ஒசாகா
இந்த போட்டிகளுக்கு தன்னை தயார் படுத்திக்கொள்ள போதிய கால அவகாசம் இல்லாத நிலையில், காயம் காரணமாகவும் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். யுஎஸ் ஓபன் மூலம் தன்னுடைய மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள ஒசாகா, தற்போது பிரெஞ்ச் ஓபன் தொடரிலிருந்து விலகியுள்ளது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூகவலைதளத்தில் பதிவு
தான் விளையாடாதது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், பிரெஞ்ச் ஓபன் தொடர் நிர்வாகிகளுக்கும் வீரர்களுக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மே மற்றும் ஜூன் மாதங்களில் வழக்கமாக நடத்தப்படும் பிரெஞ்ச் ஓபன் தொடர், இந்த முறை கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, தற்போது வரும் 27ம் தேதி துவங்கி அக்டோபர் 11ம் தேதிவரை நடத்தப்பட உள்ளது.