ஷரபோவா சங்காத்தமே வேண்டாம்.. வர்த்தகத் தொடர்புகளைத் துண்டித்தது நைக்!
நியூயார்க்: ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கியுள்ள டென்னிஸ் கவர்ச்சிப் புயல் மரியா ஷரபோவாவுடனான தனது வர்த்தகத் தொடர்புகளைத் துண்டித்துக் கொள்வதாக நைக் நிறுவனம் அறிவித்துள்ளது.
சர்வதேச விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு (வாடா) மெல்டோனியம் என்ற தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை ஷரபோவா உட்கொண்டதாக அறிவித்துள்ளது.

இதையடுத்து ஷரபோவா தற்காலிகமாக போட்டிகளில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளார். தான் தவறு செய்து விட்டதாகவும் அனைவரும் மன்னிக்க வேண்டும் என்றும் ஷரபோவா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நிலையில் நைக் ஷூ நிறுவனம், ஷரபோவாவுடன் மேற்கொண்டிருந்த வர்த்தகத்தொடர்புகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. ஷரபோவா இனிமேல் தங்களது பிராண்ட் அம்பாசடர் கிடையாது என்றும் நைக் அறிவித்துள்ளது.
இதுகுறித்து நைக் நிறுவன செய்தித் தொடர்பாளர் கெஜுவான் வில்கின்ஸ் கூறுகையில், எங்களது தொடர்புகளை நிறுத்தி வைக்கமுடிவு செய்துள்ளோம். தொடர்ந்து நிலைமையைக் கண்காணிப்போம் என்றார்.
இதற்கிடையே, வாடா இந்த ஊக்க மருந்தைத் தடை செய்தது தனக்குத் தெரியாது என்று ஷரபோவா கூறியுள்ளார். ஆனால் கடந்த ஜனவரி மாதமே இதைத் தடை செய்து விட்டதாக வாடா கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications