4 மணி நேரம்.. அசராமல் அடித்த ஜோகோவிச்.. சரண்டரான களிமண் டென்னிஸ் "மன்னன்" நடால்
பிரான்ஸ்: டென்னிஸ் ரசிகர்களுக்கு ஒரு மெகா விருந்து படைக்கப்பட்டிருக்கிறது. ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில், அதுவும் களிமண் தரையில், நடாலை வீழ்த்தியிருக்கிறார் ஜோகோவிச்.
இதோ.. பாரீஸ் நகரம் ஒரு அற்புதமான, பரபரப்பான பொழுதை, நிமிடங்களை, நொடிகளை கண்டிருக்கிறது. ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது.
இதில், உலகின் நம்பர்.1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், மூன்றாம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் ஆகியோர் மோதினர். உலகின் டாப் வீரர்கள் மோதியதால், இந்த போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதுமட்டுமின்றி, களிமண் தரை ஆட்டங்களின் 'முடிசூடா மன்னன்' நடால் என்பதால், விளையாட்டு ரசிகர்களின் ஒட்டுமொத்த பார்வையும், இந்த அரையிறுதிப் போட்டிகளை நோக்கியே மொய்த்தது.

4 மணி நேரத்தில் வெற்றி
இதில், முதல் சுற்றில் 6-3 என்ற செட் கணக்கில் நடால் முன்னிலை வகித்தார். அதன்பிறகு சுதாரித்து ஆடிய ஜோகோவிச் இரண்டாவது சுற்றை 6-3 என்ற கணக்கிலும், மூன்றாவது சுற்றை 7-6 என்ற கணக்கிலும் வென்றார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற நான்காவது சுற்று ஆட்டத்தில் 6-2 என்ற கணக்கில் ஜோகோவிச் கைப்பற்றினார். இதன்மூலம் ரபேல் நடாலை வீழ்த்தி ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்தப் போட்டி 4 மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது.

மொத்த பட்டங்கள் 20
ஜோகோவிச் பிரெஞ்சு ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இது 5-வது முறை ஆகும். 2005ல் அறிமுகமான நடால், தனது ஒட்டுமொத்த டென்னிஸ் வாழ்க்கையில், களிமண் தரையில் விளையாடிய கிராண்ட்ஸ்லாம் போட்டியில், மூன்று முறை மட்டுமே தோல்வியடைந்துள்ளார். இதற்கு முன் பாரீஸில் கடந்த 4 முறை நடால் பட்டம் வென்றுள்ளார். அவரது மொத்த கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் 20. இதன் மூலம் அவர் ரோஜர் பெடரரை சமன் செய்தது குறிப்பிடத்தக்கது.

முதல் முறை
ஜோகோவிச் பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இது ஐந்தாவது முறையாகும், அவர் கடைசியாக 2016ல் பட்டம் வென்றிருந்தார். இறுதிப் போட்டியில் ஆண்டி முர்ரேவை வீழ்த்தி இருந்தார். அதேசமயம் ரோலண்ட் கரோஸில் (Roland Garros) நடந்த போட்டிகளில் முதல் செட்டை வென்ற பிறகு, நடால் தோற்றது இதுவே முதல் முறை. இந்த நிலையில், நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாசை, நோவக் ஜோகோவிச் எதிர்கொள்கிறார்.

சிறந்த டென்னிஸ்
போட்டி குறித்து ஜோகோவிச் கூறுகையில், "முதலில் நான் இந்த களிமண் தரையில் ரஃபேல் நடாலுடன் விளையாடியது ஒரு பாக்கியம் என்று சொல்ல விரும்புகிறேன். பாரிஸில் நான் விளையாடியதிலேயே மிகப்பெரிய போட்டி இது. மேலும், இருவருக்கும் ஏற்ற சூழல் நிறைந்த சிறந்த போட்டி. இந்த களிமண் தரையில், நடாலுக்கு எதிராக வெற்றிபெற நீங்கள் உங்கள் சிறந்த டென்னிஸ் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். நான் எனது சிறந்த டென்னிஸை விளையாடினேன். வெற்றிக்கு பிறகு, நான் எப்படி உணர்கிறேன் என்பதைச் சுருக்கமாக சொல்வது கடினம்" என்றார்.


Click it and Unblock the Notifications