ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக்ஸில் ஆடவர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்ததால் மைதானத்தில் இருந்து கண்ணீர் மல்க வெளியேறினார்.
நம்பர் 1 வீராரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், தர வரிசையில் 141-வது இடத்தில் உள்ள அர்ஜெண்டினா வீரர் ஜிவான் மார்டின் டெல் போட்ராவுடன் மோதினார். ஆனால், தங்கப் பதக்கத்தை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டு களம் கண்ட ஜோகோவிச்சுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

பரபரப்பாக சென்ற இப்போட்டியில், 7-6 என்ற கணக்கில் முதல் செட்டை வசமாக்கினார் டெல் போட்ரா. பின்னர் இரண்டாவது செட்டை கைப்பற்றிவிடலாம் என்ற நோக்கில் இருந்த ஜோகோவிச், அதே செட் கணக்கில் மீண்டும் தோற்றார்.
இதன் மூலம் அர்ஜெண்டினாவின் டெல் போட்ரா 7-6, மற்றும், 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றியை வசமாக்கினார். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் நிலை வீரர் ஜோகோவிச் கண்ணீர் மல்க மைதானத்தில் இருந்து வெளியேறினார். ஜோகோவிச் சோகத்தில் கண்ணீர் விட, டெல் போட்ரா வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் விட்டுள்ளார்.
ஜோகோவிச் 2008-ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்ஸில் வெண்கலப்பதக்கம் வென்றிருந்தார். இதனிடையே 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்ற ஜோகோவிச், வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில், மார்டின் டெல் போட்ராவுடன் தோல்வியடைந்தார். இந்நிலையில், தற்போது ரியோ ஒலிம்பிக்ஸிலும் டெல் போட்ராவுடன் நடைபெற்ற போட்டியில் தான் ஜோகோவிச் தோல்வியடைந்தார என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக டெல் போட்ரா லிப்டில் வந்து கொண்டிருக்கும் போது மின் தடை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் சுமார் 40 நிமிடம் லிப்டுக்குள் சிக்கிக் கொண்டாராம். லிப்டில் இருந்து சத்தம் வருவதை அறிந்த அர்ஜெண்டினா ஹேண்ட்பால் அணி வீரர் ஒருவர், பின்னர் லிப்டின் கதவை திறந்து டெல் போட்ராவை மீட்டாராம். லிப்டில் மாட்டினால் நல்ல சகுனம் போலும் என்ற எண்ணம் இந்த வெற்றிக்கு பிறகு பிற வீரர்களுக்கும் வந்துள்ளதாம்.