பாரீஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் நம்பர் 1 வீரரான அல்காரஸை எதிர்த்து கிராண்ட்ஸ்லாம் ஜாம்பவான் வீரரான ஜோகோவிச் எதிர்கொள்ள உள்ளது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நட்சத்திர வீரரான ரஃபேல் நடால் பங்கேற்காததால், நிச்சயம் ஜோகோவிச் 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவருக்கு சவால் அளிக்கும் வகையில் ரஃபேல் நடால் ஜூனியர் என்று பார்க்கப்படும் அல்காரஸ் முன்னேறி வருகிறார். இதனால் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் பிரெஞ்ச் ஓபன் தொடரின் அரையிறுதியில் இவர்கள் இரும்வரும் மோதவுள்ளனர். நேற்று இரவு நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்சை எதிர்த்து ரஷ்யயாவின் கரன் ஹெச்நவ் எதிர்கொண்டார். இதில் அதிர்ச்சியளிக்கும் வகையில் முதல் செட்டை இழந்த ஜோகோவிச், இரண்டாவது செட்டின் டை பிரேக்கரின் போது விஸ்வரூபம் எடுத்தார். இரண்டாவது செட்டுக்கு பின் ஆட்டம் ஜோகோவிச்சின் செயல்படி அமைந்தது.
சுமார் 3 மணி நேரம் 40 நிமிடம் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் ஹெச்நவ்வை 4-6, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஜோகோவிச் அபார வெற்றிபெற்றார். காலிறுதி சுற்றில் வெற்றிபெற்றதையடுத்து பிரெஞ்சு ஓபன் தொடரில் ஜோகோவிச் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். அதேபோல் இன்னொரு பக்கம் சிட்சிபாஸை எதிர்த்து இளம் வீரர் அல்காரஸ் விளையாடினார். அதில் 6-2, 6-1 என்று முதல் இரு செட்களை அல்காரஸ் கைப்பற்றிய நிலையில், 3வது செட்டில் சிட்சிபாஸ் சவாலளித்தார். ஆனால் அதையும் டை பிரேக்கர் வரை சென்று அல்காரஸ் கைப்பற்றி அசத்தினார்.
இதனால் நாளை மறுநாள் நடக்கும் பிரெஞ்ச் ஓபன் அரையிறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் - அல்காரஸ் மோதவுள்ளனர். இதுவரை இவர்கள் இருவரும் மோதியுள்ள ஒரேயொரு போட்டியில் அல்காரஸ் வெற்றிபெற்று அசத்தினார். 20 வயதாகும் அல்காரஸ், 36 வயதாகும் ஜோகோவிச்சை எதிர்த்து விளையாட உள்ளார். இந்தப் போட்டியில் வெற்றிபெறுபவரே பிரெஞ்ச் ஓபன் தொடரை வெல்ல வாய்ப்பு இருப்பதால், இந்தப் போட்டியை ரசிகர்கல் பலரும் எதிர்பார்த்துள்ளனர்.