ரியோ டி ஜெனிரோ: பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் சனிக்கிழமை 31வது ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக துவங்க உள்ளது. இந்தியா சார்பில் இதுவரை இல்லாத அளவுக்கு 124 வீரர், வீராங்கனைகள் கொண்ட அணி பங்கேற்கிறது.
ரியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியை பொறுத்தவரை இந்தியாவின் சார்பில் 4 பேர் களமிறங்குகின்றனர். ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவுகளில் இந்தியாவிலிருந்து யாரும் தகுதி பெறவில்லை.

ஆடவர் இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ் - ரோகன் போபண்ணா ஜோடியும், மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா - பிரார்த்தனா தாம்ப்ரே ஜோடியும், கலப்பு இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா - சானியா மிர்சா ஜோடியும் களமிறங்குகின்றன.
42 வயதான போபண்ணா களமிறங்கும் 7வது ஒலிம்பிக் இது. இந்த வயதிலும் பயஸ் நேர்த்தியான ஆட்டக்காரராக உள்ளார். போபண்ணாவும் நல்ல பார்மில் இருக்கிறார். இந்த ஜோடி பிரச்சினைகளை மறந்து களத்தில் ஜொலிக்கும் பட்சத்தில் நிச்சயம் பதக்கம் கிடைக்கும்.
இரட்டையர், கலப்பு இரட்டையர் என இரு பிரிவுகளிலும் சேர்த்து 18 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றிருக்கிறார் பயஸ். போபண்ணா இதுவரை கிராண்ட் ஸ்லாம் போட்டியில் வென்றதில்லை. சர்வதேச அளவில் 14 இரட்டையர் பட்டங்கள் வென்றிருக்கிறார்.
இந்நிலையில், இரட்டையர் தரவரிசையில் 15வது இடத்தில் இருக்கும் இந்த ஜோடி, மார்கின் மாட்கோவ்ஸ்கி ஜோடியுடன் மோதவுள்ளது. இதில் ஆடவர் இரட்டையரில் நாட்டுக்காக விளையாடுகிறோம் என்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் பயஸும், போபண்ணாவும் ஒருங்கிணைந்து விளையாடினால் மட்டுமே பதக்க வேட்டை சாத்தியப்படும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.