சென்னை: பாரிஸ் ஒலிம்பிக் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 7 நாட்களே இருக்கும் சூழலில், 7 ஒலிம்பிக் தொடரில் விளையாடிய இந்திய வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ள இந்திய ஜாம்பவான் குறித்து பார்க்கலாம்.
1984 ஒலிம்பிக் தொடர் முதல் 1992 ஒலிம்பிக் தொடர் வரை இந்தியா ஒரு பதக்கம் கூட வெல்ல முடியாமல் திரும்பியது. அந்த அவமானத்தை 1996ஆம் ஆண்டு துடைத்தெறிந்த இந்திய வீரர் தான் லியாண்டர் பயஸ். டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 126ஆம் இடத்தில் இருந்த லியாண்டர் பயஸ், 1996ஆம் ஆண்டு அட்லாண்டாவில் நடந்த ஒலிம்பிக் தொடரில் வெண்கலப் பதக்கத்தை வென்றது இந்திய விளையாட்டு வரலாற்றின் மிகச்சிறந்த கதைகளில் ஒன்று.

அந்த ஒலிம்பிக் தொடரில் லியாண்டர் பயஸ் ஒய்டு கார்ட் மூலமாகவே பங்கேற்றார். அட்லாண்டா ஒலிம்பிக்கில் சாதிக்க வேண்டும் என்பதற்காகவே 4 ஆண்டுகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். இன்னும் சொல்லப் போனால், ப்ரோ டூரை கூட ரத்து செய்துவிட்டு ஒலிம்பிக் தொடருக்காக பயிற்சி மேற்கொண்டார். அட்லாண்டா டென்னிஸ் செண்டர்களின் சூழல் எப்படி இருக்கும் என்று அறிந்து கொண்டு லியாண்டர் பயஸ் பயிற்சி மேற்கொண்டதெல்லாம் யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாதது.
அதுமட்டுமல்லாமல் 1996க்கு முன்பிருந்து 44 ஆண்டுகளில் இந்தியா மட்டுமல்லாமல் ஆசியாவிலேயே தனி நபர் விளையாட்டில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் வீரர் லியாண்டர் பயஸ் தான். அதேபோல் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியின் போது உடைந்த மணிக்கட்டுடன் விளையாடி பதக்கத்தை வென்றுள்ளார். ஃபெர்னாண்டோ மெலிகேனியுடனான வெண்கலப் பதக்க போட்டியின் 2வது செட் ஆட்டத்தின் பயஸ் எடுத்த பிரேக் பாய்ண்ட் இன்றும் இந்திய ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒரு கட்டத்தில் உடல் வலிமை இல்லையென்றாலும் மன வலிமை கொண்டு லியாண்டர் பயஸ் போராடினார் என்றே சொல்லலாம். 23 வயதில் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற லியாண்டர் பயஸால், இந்திய டென்னிஸ் வரலாறே மாறியது என்று சொல்ல முடியும். இன்று வரை ஒலிம்பிக் போட்டிகளில் நடந்த டென்னிஸ் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீரர் பயஸ் மட்டும் தான். அதுமட்டுமல்லாமல் 7 முறை ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடிய இந்திய வீரரும் லியாண்டர் பயஸ் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.