டெல்லி: விம்பிள்டன் மகளிர் இரட்டையர் பட்டத்தை வென்றுள்ள சானியா மிஸ்ராவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விம்பிள்டன் மகளிர் இரட்டையர் பட்டத்தை வென்ற முதல் இந்தியராக உருவெடுத்திருக்கிறார் சானியா மிர்ஸா. இதையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில் சானியா மிர்ஸாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ட்டினா ஹிங்கிஸும், சானியா மிர்ஸாவும் சிறப்பாக ஆடினார்கள். அருமையான, பென்டாஸ்ட்டிக்கான வெற்றியை விம்பிள்டனில் பதிவு செய்துள்ளீர்கள். சானியாவுக்காக நாடு பெருமைப்படுகிறது. மிகவும் மகிழ்ச்சி என்று மோடி தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி டிவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சானியா மிர்ஸா, மார்ட்டினா ஹிங்கிஸ் ஆகிய இருவருக்கும் பட்டம் வென்றமைக்காக இதயப்பூர்வமான வாழ்த்துகள். சானியாவின் சாதனை இந்திய இளைஞர்களை ஊக்குவிக்கும் என்று வாழ்த்தியுள்ளார்.
சானியா மிர்ஸா டென்னிஸ் விளையாட வந்து 12 வருடங்களாகிறது. இந்த நிலையில் தற்போது முதல் முறையாக மகளிர் இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அவர் வென்றுள்ளார். தற்போது அவர் கலப்பு இரட்டையர், இரட்டையர் பட்டங்களை வென்று விட்டார். ஒற்றையர் பட்டம் மட்டுமே கனவாக இருக்கிறது. அது கஷ்டமும் கூட.