நியூயார்க் : 2019 அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் வெற்றி பெற்றார்.
ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ்வை 4 மணி நேரம் 50 நிமிடங்கள் போராடி வீழ்த்தினார் நடால். இந்த வெற்றி மூலம் தன் 19வது கிராண்ட்ஸ்லாம் பட்டதையும் வென்று இருக்கிறார் ரபேல் நடால்.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற அமெரிக்க ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நடால் முதல் இரண்டு செட்களை 7 - 5, 6 - 3 என்ற கேம்களில் வென்றார்.
அடுத்த இரண்டு செட்களில் சுதாரித்து ஆடிய ரஷ்ய வீரர் மெத்வதேவ், 5 - 7, 4 - 6 என்ற கேம்களில் வென்றார். வெற்றியை நிர்ணயிக்கும் ஐந்தாவது செட்டில் நடால் தன் அனுபவத்தை காட்டி, அபாரமாக ஆடி 6 - 4 என்ற கேம்களில் வென்றார்.
அத்துடன் மூன்று செட்களை கைப்பற்றி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றினார் ரபேல் நடால். இது அவரின் நான்காவது அமெரிக்க ஓபன் பட்டம் ஆகும். இத்துடன் 19 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று இருக்கும் நடால், ரோஜர் பெடரரின் 20 கிராண்ட்ஸ்லாம் வென்ற சாதனையை நெருங்கி இருக்கிறார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் ரோஜர் பெடரர் தான் முதல் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த உச்சகட்ட சாதனைக்கு நெருக்கடி கொடுத்துள்ளார் நடால். ரோஜர் பெடரர் காலிறுதிப் போட்டியில் அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.