பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பட்டத்தை 9வது முறையாக ரபெல் நடால் கைப்பற்றி களிமண் தரையில் தன்னை யாரும் அசைக்க முடியாது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான, பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி கடந்த இரு வாரமாக பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டம் நேற்று நடந்தது. நடப்பு சாம்பியனும் நம்பர் ஒன் வீரருமான ஸ்பெயினின் ரபெல் நடாலும், 2ம்நிலை வீரர் செர்பியாவின் நோவக் ஜோகேவிச்சும் மோதினர்.

முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச், அந்த செட்டை 6க்கு 3 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதன்பிறகு நடால் சுதாரித்துக் கொண்டு ஆடத்தொடங்கினார். மொத்தம் 3 மணி நேரம் 31 நிமிடங்கள் நீடித்த கடுமையான ஆட்டத்தின் முடிவில் நடால், 3க்கு 6, 7க்கு ஐந்து, 6க்கு 2, 6க்கு 4 என்ற செட் கணக்கில் ஜோக்கோவிச்சை வீழ்த்தினார்.
பிரெஞ்சு ஓபனில் 10வது முறையாக விளையாடும் நடால், அதில் வென்ற 9வது பட்டம் இதுவாகும். கடந்த ஐந்து போட்டித்தொடர்களில் தொடர்ச்சியாக இந்த பட்டத்தை கைப்பற்றிவருகிறார். களிமண் தரையில் நடக்கும் போட்டிகளில் நடாலுக்கு இணை அவரே என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
சாம்பியனுக்கு ரூ.13 கோடியும், 2வது இடம் பிடித்த ஜோகோவிச்சுக்கு ஆறரை கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. பெண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் சுவெஹிசை மற்றும் சூய்பெங் ஆகிய சீன வீராங்கணைகள், இத்தாலியின் சாரா எர்ரானி, ரோபர்ட்டா ஜோடியை, 6க்கு4 மற்றும் 6க்கு 1 என்ற நேர் செட்டுகளில் வீழ்த்தி பட்டம் வென்றனர்.