பாரிஸ் : பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் முதல் சுற்று போட்டியில் நட்சத்திர வீரர் நடால் தோல்வியடைந்து வெளியேறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடர் மே 26 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் சுற்று போட்டிகள் நடந்து வரும் நிலையில் நேற்றிரவு நடந்த போட்டியில் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் - ஸ்வெரவ் இடையிலான ஆட்டம் நடைபெற்றது. நட்சத்திர வீரர்கள் மோதிய போட்டி என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

அதுமட்டுமல்லாமல் களிமண் தரை மன்னனான ரஃபேல் நடால் விளையாடும் போட்டியை காண்பதற்கு நட்சத்திர வீரர்களான ஜோகோவிச், அல்காரஸ் உள்ளிட்ட பலரும் நேரில் வந்தனர். அதேபோல் மகளிர் வீராங்கனை இகா ஸ்வியாடக்கும் நேரில் அமர்ந்து பார்த்தனர். இந்த போட்டியின் முதல் சுற்றில் நடாலுக்கு வழக்கம் போல் ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருந்தது.
ஆனால் ஸ்வெரவ் தொடக்கம் முதலே முழு பலத்தையும் வெளிப்படுத்தியதால் 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். இதனால் மைதானத்தில் "ரஃபா, ரஃபா" என்று கோஷங்கள் நின்று போனது. பின்னர் இரண்டாவது செட் ஆட்டம் பரபரப்புடன் தொடங்கிய நிலையில், இரு வீரர்களும் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஆட்டம் டை பிரேக்கருக்கு சென்றது.
அதில் ஸ்வெரவ் 7-5 என்ற கைப்பற்றியதால் இரண்டாவது செட்டை 7-6 என்ற செட் கணக்கில் வென்றார். இதனால் நடால் மீதான அழுத்தம் அதிகரித்தது. தொடர்ந்து நடைபெற்ற 3வது செட் ஆட்டத்தில் 6-3 என்று வென்று ஸ்வெரவ் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதனால் 14 முறை பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ரஃபேல் நடால், முதல் சுற்றிலேயே வெளியேறினார்.
தொடர்ந்து நடால் பேசுகையில், நான் 100 சதவிகித ஃபிட்னஸுடன் இல்லை. ஒருவேளை இதுதான் எனது கடைசி பிரெஞ்ச் ஓபன் தொடர் என்றால், நிச்சயம் மகிழ்ச்சியாக இருந்தேன் என்று சொல்லுவேன். கடந்த ஒரு வாரமாக பிரெஞ்ச் ஓபன் தொடருக்கான பயிற்சியில் இருந்தே ரசிகர்கள் ஆதரவளித்தனர். இந்த நாளில் மனதில் உள்ள உணர்வுகளை சொல்ல முடியவில்லை. மிகவும் பிடித்த இடத்தில் இருந்து ஏராளமான ஆதரவு கிடைப்பது எப்போதும் ஸ்பெஷல் தான்.
இப்போது டென்னிஸ் விளையாடுவதற்கும், அதற்காக குடும்பத்தினருடன் பயணிப்பதும் மகிழ்ச்சி தான். கடந்த இரு மாதங்களை ஒப்பிடுகையில், இப்போது எனது உடல் நன்றாக உள்ளது. ஒலிம்பிக் தொடரில் விளையாடுவதற்காக மீண்டும் வருவேன் என்று நினைப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் ரஃபேல் நடாலின் ரசிகர்கள் பலரும் சோகத்தில் உள்ளனர்.