ஸ்பெய்ன்: பிரபல டென்னிஸ் ஜெயண்ட் ரபேல் நடால் விம்பிள்டன் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்சில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 13 முறை சாம்பியன் பட்டம் வென்றவர் ரபேல் நடால். இவர் "களிமண் தரையின் மன்னன்" என்றால் மிகையாகாது. அவ்வளவு எளிதில் யாரும் வீழ்த்திவிட முடியாது.
ஆனால், கடந்த வாரம் முடிவடைந்த பிரெஞ்ச் ஓபன் தொடர், நடாலின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அரையிறுதிப் போட்டியில் நடாலை ஜோகோவிச் வீழ்த்தினார். இதனால் நடால் 14-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
பிரெஞ்ச் ஓபனை தொடர்ந்து லண்டனில் விம்பிள்டன் ஓபன் வருகிற 28-ம் தேதி தொடங்கி, ஜூலை 11 வரை நடைபெறவிருக்கிறது. அதன்பின் இரண்டு வாரம் இடைவெளியில் ஜூலை 23ம் தேதி மிக முக்கியமான டோக்கியோ ஒலிம்பிக் தொடர் தொடங்குகிறது. இத்தொடர் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடக்கிறது.
இந்த நிலையில் விம்பிள்டன் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகுவதாக ரபேல் நடால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "பிரெஞ்ச் ஓபன்- விம்பிள்டன் ஓபன் தொடருக்கு இடையில் இரண்டு வார இடைவெளி மட்டுமே உள்ளது.
செம்மண் தரையில் விளையாடிய பின்னர், உடனடியாக எனது உடலை புல்தரைக்கு ஏற்றவாறு மாற்றுவது எளிதானது அல்ல. இந்த முடிவை நான் எளிதாக எடுத்து விடவில்லை. ஆனால் எனது உடல்நிலை பழைய நிலைக்கு திரும்ப ஓய்வு தேவைப்படுகிறது. உடல் சொல்வதை கேட்க வேண்டியது முக்கியம்' என்று நடால் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
நடாலின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, டென்னிஸ் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.