நான் இனிமேல் ஒலிம்பிக்கில் விளையாட மாட்டேன்.. அழுகிறார் சானியா மிர்ஸா
ரியோ டி ஜெனீரோ: ஒலிம்பிக்கில் ஒரு பதக்கமும் பெற முடியாமல் போய் விட்டதே என்ற வேதனையில் இருக்கிறார் சானியா மிர்ஸா. மகளிர் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றமளித்தார் சானியா. கலப்பு இரட்டையரில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி வரை முன்னேறி அதில் தோல்வியுற்றார்.
இந்த நிலையில் இதுதான் தனக்கு கடைசி ஒலிம்பிக் போட்டி என்றும், 2020ல் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தான் ஆடப் போவதில்லை என்றும் சானியா அறிவித்துள்ளார்.
இந்த ஒலிம்பிக் போட்டி சானியாவுக்கு பல ஏமாற்றங்களை அளித்து விட்டது. இந்தப் போட்டித் தொடருக்கு நடுவேதான் அவரும் மார்ட்டினா ஹிங்கிஸும் பிரியும் செய்தியும் வந்து சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கண்ணீரில் சானியா
நேற்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவு வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் சானியா மிர்ஸா - ரோஹன் போபண்ணா தோல்வி அடைந்தது. இதனால் இந்தியா பெரும் ஏமாற்றமடைந்தது. போட்டி முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது சானியா மிர்ஸா அழுது விட்டார்.

கஷ்டமாக இருக்கிறது
இந்தத் தோல்வி மிகக் கடுமையானது, கஷ்டமாக இருக்கிறது. அடுத்த ஒலிம்பிக்கில் நான் விளையாடுவேனா என்று எனக்குத் தெரியவில்லை. விளையாட வாய்ப்பில்லை என்றார் சானியா.

தாரை தாரையாக கண்ணீர்
தனது பேட்டி முழுவதும் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடியே பேசினார் சானியா. அவரால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து சானியா பேசுகையில், எங்களால் சிறந்ததை இன்று தர முடியவில்லை. எங்களது தோல்வியிலிருந்து நாங்கள் மீண்டு வர வேண்டு்ம் என்றார் சானியா.

சொல்ல முடியாது
டென்னிஸில் இப்படித்தான் நடக்கும் என்று உறுதியாக கூற முடியாது. வாய்ப்புகளை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பல விஷயங்களை விரிவாக பேச முடியாது. நாம் இந்தத் தோல்வியிலிருந்து வெளியேறி வர வேண்டும் என்றார் சானியா.

இந்தியில் பேச மறுத்தார்
வழக்கமாக இந்தியிலும் பேசும் சானியா மிர்ஸா, நேற்றைய பேட்டியின்போது இந்தியில் பேச மறுத்து விட்டார். அதேபோல ரோஹன் போபண்ணாவும் சரிவரப் பேசவில்லை. அவரும் தோல்வி தந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications