லண்டன்: விம்பிள்டன் போட்டியின்போது, இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இளம் சிறுமியின் ஆசையை நிறைவேற்றி அசத்தினார் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர்.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் போட்டிகள் துவங்கியுள்ளன. 9வது முறையாக இந்தப் பட்டத்தை வெல்வதற்காக களமிறங்கியுள்ளார் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர்.

36 வயதாகும் ரோஜர் பெடரர் முதல் சுற்று ஆட்டத்தில் வழக்கம்போல், ரசிகர்களுக்கு நல்ல விருந்து வைத்தார். செர்பியாவின் டுசான் லாஜோவிக்கை 6-1, 6-3, 6-4 என்ற செட்களில் வென்றார்.
போட்டி முடிந்த உடன், ரசிகர்களுக்கு பெடரர் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார். அப்போது அங்கு நின்றிருந்த இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இளம் சிறுமி, கையில் ஒரு அட்டையை வைத்திருந்தார். அதில், ரோஜர் உங்களுடைய தலையில் அணியும் ஹெட்பேண்டை எனக்கு தருவீர்களா என்று எழுதப்பட்டிருந்தது.
அந்த சிறுமியிடம் சென்ற பெடரர் அதைப் படித்தார். உடனடியாக தன்னுடைய பையில் இருந்து புதிய ஹெட்பேண்டை எடுத்து அந்த சிறுமிக்கு பரிசாக அளித்தார்.
இதை எதிர்பார்க்காத அந்த சிறுமி ஆனந்த அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
பெடரரின் இந்த செய்கையை அந்த சிறுமியின் தந்தை அபிஜித் ஜோஷி புகழ்ந்து தள்ளியுள்ளார். டுவிட்டரில் பெடரரின் அன்பு பரிசு குறித்து அவர் பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து ரசிகையின் கோரிக்கையை நிறைவேற்றிய பெடரருக்கு டுவிட்டரில் வாழ்த்து குவிந்து வருகிறது.