துபாய் : ரோஜர் பெடரர் தன் டென்னிஸ் வரலாற்றில் இதுவரை 99 முறை பட்டம் வென்று இருக்கிறார். நூறாவது பட்டம் வெல்ல காத்திருக்கிறார்.
கடந்த அக்டோபர் மாதம் முதல் ரோஜர் பெடரர் பங்கேற்ற ஒவ்வொரு டென்னிஸ் தொடரிலும் அவர் தன் நூறாவது பட்டத்தை வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அவரும் ஒவ்வொரு முறையும் தன் ரசிகர்களை ஏமாற்றி வருகிறார். தற்போது துபாய் டியூட்டி ஃப்ரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க உள்ள பெடரர் தன் நூறாவது பட்டத்தை வெல்வார் என ரசிகர்கள் மீண்டும் காத்திருக்கிறார்கள்.
கடைசியாக ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்ற ரோஜர் பெடரர் 16-நபர்கள் சுற்றில் சிட்சிபாஸ்-இடம் தோல்வி அடைந்து வெளியேறினார். அதன் பின் சில வார ஓய்வில் இருந்து மீண்டு வந்துள்ள பெடரர், துபாய் டென்னிஸ் தொடரில் ஆதிக்கம் செலுத்த முடியும் என நம்புவதாக கூறி உள்ளார்.
ரோஜர் பெடரர் தன் கடந்த காலம் போல தொடர் வெற்றிகளையும், பட்டங்களையும் குவிக்க முடியாவிட்டாலும் அதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். துபாய் தொடரில் பெடரர் என்ன செய்யப் போகிறார்? என பார்க்கலாம்!