பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டியின் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் இரண்டாம் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா தன்னை எதிர்த்து ஆடிய போலந்து வீரங்கனை அக்னீஸ்கா ராத்வான்ஸ்காவிடம் வெற்றியை பறிகொடுத்தார்.
வியாழக்கிழமையன்று பாரிசில் நடைபெற்ற போட்டியில் உலகத் தரவரிசையில்72ஆம் இடத்தில் உள்ள சானியா 12 ஆம் இடத்தில் உள்ள அக்னீஸ்கா உடன் மோதினார் இதில் 2-6, 4-6 என்ற நேர் செட்களில் சானியா தோல்விய தழுவினார். ஆட்டத்தின் போது சானியா செய்த 9 இரட்டைத் தவறுகளே அவருடைய தோல்விக்கு காரணமாக அமைந்தது.
வழக்கமாகவே ஆக்ரோசமாக ஆட்டத்தை வெளிப்படுத்தும் ராத்வான்ஸ்கா இன்று பலவீனமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். இருப்பினும் சானியா மிர்சா முக்கியமான கட்டத்தில் சர்வ்களில் டபுள் ஃபால்ட்களையும், ஆட்டத்தில் வலையிலோ அல்லது வெளியிலோ அடித்து வாய்ப்புகளை தொடர்ந்து நழுவ விட்டார் இது தோல்விக்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
சானியா மிர்சா மொத்தம் 42 முறை தவறுகள் இழைத்தார். இதைத் தவிர சர்வ்களைல் 9 முறை இரட்டைத் தவறிழைத்தார். ராத்வான்ஸ்கா ஒருமுறை கூட சர்வ்களில் இரட்டைத் தவறிழைக்கவில்லை.
இரண்டாவது செட்டில் முதலில் சர்வ் செய்த ராத்வான்ஸ்காவின் சர்வை பிரேக் செய்தார் சானியா அதில் ஒரு ஃபோர்ஹேண்ட் 'டவுன் த லைன்' ஷாட் அபாரமானது. ஆனால் அடுத்து தனது சர்வைக் கோட்டை விட்டார் சானியா. இருவரும் மாறி மாறி தங்களது சர்வ்களை தோற்றபடியே இருந்தனர். கடைசியில் ராத்வான்ஸ்கா சானியாவின் சர்வை முறியடித்து முன்னிலை பெற்றார்.
சானியா 4- 5 என்று பின் தங்கியிருந்தபோது தனது சர்விலேயே 0- 40 என்று வந்து கடைசி ஷாட்டை நெட்டில் அடித்து செட்டையும் ஆட்டத்தையும் கோட்டை விட்டார். இதனால் 76 நிமிடங்களில் ஆட்டம் முடிவிற்கு வந்தது. இதன் மூலம் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பதக்கம் வெல்லும் கனவு முடிவிற்கு வந்தது.
ஒற்றையர் ஆட்டத்தில் தோல் வியடைந்தாலும் பெண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் சானியா மிர்சா ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியதுயுள்ளது சற்றே ஆறுதலான விசயம். அதேபோல் கலப்பு இரட்டையர் பிரிவில் தனது சகாவான ரோகன் போபண்ணாவுடன் இணைந்து வெற்றிக்கனியை பறிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.