கொழும்பு: டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இலங்கைக்கு எதிரான சர்வதேச ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றதை தனது கணவர் சோயப் மாலிக்குடன் சேர்ந்து டப்ஷ்மாஷ் வீடியோ மூலம் கொண்டாடியுள்ளார்.
டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவின் தங்க மங்கையாக வலம் வருபவர் சானியா மிர்சா. அவரும் மார்டினா ஹிங்கிஸும் சேர்ந்து அண்மையில் நடந்த விம்பிள்டன் பெண்கள் இரட்டையர் பிரிவில் கோப்பையை வென்றனர். சானியா-ஹிங்கிஸ் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமைந்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த 19ம் தேதி கொழும்பில் நடந்த இலங்கைக்கு எதிரான சர்வதேச ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்றது. அந்த வெற்றியை சானியாவின் கணவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயப் மாலிக் அணி வீரர்களுடன் கொண்டாடியுள்ளார். கொண்டாட்டத்தில் சானியாவும் கலந்து கொண்டார்.
அவர்கள் டப்ஷ்மாஷ் வீடியோ எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். இது குறித்து சானியா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
வெற்றியை @realshoaibmalik #irfan #ehsan #bilal #mukhtar #babar #brad ஆகியோருடன் கொண்டாடுகிறேன் என்று தெரிவித்து டப்ஷ்மாஷ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த டப்ஷ்மாஷ் வீடியோவை சோயப் மாலிக்கும் தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளார். இலங்கையில் விளையாடி வரும் தனது கணவர் மாலிக்கை ஊக்குவிக்க சானியாவும் அங்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.